ஆன்மீகம்
(11.24.2017)
இதுவரை நாம் அறிந்தது:
1.ஆன்மீகம் என்பது உடலெடுத்த அனைவருக்கும் தொடர்புடையது.
2.மதங்களைக் கடந்தது
3.ஆன்மீகத்தைப் பயணமாகக் கொண்டால்
நம் மனத்திற்குப் புரியும்படி மலையேறுவது,கடலைக் கடப்பது,… என உருவகித்துக் கொள்ளலாம்.இது ஒரு உருவகமே அன்றி உண்மையல்ல!
4.மலையேற்றம் என்ற உருவகத்தைக் கொண்டால் இல்லறத்தை யானைப்பாதை ,படிகள் கொண்ட பாதையெனவும், துறவறத்தை மலைப்பாதைப் பயணமாகவும் உருவகித்தோம். இதில் மனிதப்பிறவியை ஒரு விபத்து என்றும் ஆன்மா என்ற ஒன்று இல்லை . இருக்கும் வாழ்க்கையை அனுபவி என்போரை, மலையேறும் அவசியமில்லை என அடிவாரத்தில் வாழ்வோராகவும் உருவகிக்கலாம்.
5. மலையேறி மற்றவரையும் ஏற்ற உதவுவோரை மகான்கள் என்ற அடைமொழியாலும் அழைக்கிறோம்.
மேலும்:
ஒரு பயணம் என்றால் அதற்கென்று ஒரு திட்டம்,எவ்வழி செல்கிறோம்,எதையெல்லாம் எதிர்பார்க்கலாம் என்ற திட்டம் வேண்டும்.
ஒன்று துறவற வழி மற்றொன்று இல்லறம் எனக் கொள்ளலாம். இரண்டு பயணங்களின் பாதைகளும் வேறு. இலட்சியம் ஒன்றே!
துறவறத்திலும் இருவகை உண்டு. ஒன்று அஷ்டாங்க யோகத்தை முழு நேரமும் பயின்று படிப்படியாக துறவறத்தில் ஈடுபட்டு நிலைத்த தியானநிலையில் தன்னை இடைவிடாது நிறுத்தி 10-20 ஆண்டு முயன்று தன்னைத் திருத்தி,தான் கடவுள் என்ற நிலையை அன்றாட வேலைகளுக்கும் நடுவில் உணர்ந்த ஜீவன் முக்தர்களாய் தான் எண்ணிய போது உடலை உதறிப் பின் பிறவாது ஒளியுருவாய் நீடிப்போர் ஒருவகை.
முன் பிறவியில் அஷ்டாங்க யோகம் கடைப்பிடித்து முதிர்ச்சி அடைந்து முக்தி அதாவது தான் கடவுள் என்ற நிலை எய்தும் முன் இறந்து போய் இப்பிறவியில் மிக இளவயதில் ஞானமார்க்கம் அடைவோர் இரண்டாம் வகை(இரமணர். எந்தக் கடவுளையும் வழிபடாமல் நான் யார் என்ற கேள்விக்கு விடை கண்டார். யோகப் பயிற்சி முன் பிறவியில் முடிந்ததால் பலரும் “நான் யார் ? என்று கேட்டால் முக்தி பெறலாம் என முட்டாள்த்தனமாக நினைக்கிறார்கள்! ஆன்மீகத்தில் குறுக்கு வழிகள் கிடையாது!)
(தொடரும்)