ஆன்மீகம் இரண்டாம் பகுதி
=======================
வானவில்
=========
ஆன்மீகம்-64
===========
3 Feb 2019
அறம்-4
=======
அறம் இல்லத்தில் காப்பவள் பெண்!
அவள் அறத்தின் ஆணிவேர்!
அதற்கு கணவன் உறுதுணையாய் இருப்பது அவசியம்.
அறத்தை பயன் தூக்காமல் கடமையாய்ச் செய்வதை யக்ஞம் என்று குறிப்பிடுகிறோம். அந்த கடமைகள் ஐந்து வகைப்படும்.
நீத்தார்,தேவர்கள்,மனிதர்கள்,மற்ற உயிர்கள்,நூல்கள் இவை அனைத்தையும் காப்பது இல்லறத்தாரின் ஐந்து கடமை அல்லது பஞ்ச யக்ஞம் எனப்படும் என்று பார்த்தோம்.
பிறன்மனை நோக்காது வணங்கத்தக்க வாழ்க்கை வாழும் பேராண்மையே ஆண்கள் பேண வேண்டிய அடிப்படை அறம்!
சரி. நல்துணை அமைந்த கணவன் மனைவி அறச் செயலில் ஏன் ஈடுபடவேண்டும்?
தம் மனம் போல வாழலாமே! அவர்களை தட்டிக் கேட்ப்போர் யாருமில்லை. யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல.கண்காணிப்பார் இல்லை என்பது நம் அறியாமையே!
கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே! – திருமூலர்
கண்காணிப்பவன் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் இறைவனே. இதையே பல மதங்கள் பல வகையாக வலிறுத்துகின்றன. இறையச்சம் என்கிறது இஸ்லாம்.
சிந்தனை சொல் செயல் இவை மூன்றாலும் அறவழி நடப்பது நமது குறிக்கோள். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. செயலிலே அறம் செய்ய முயல்வது எளிதான முதல் படி.
1.உடலை தூய்மையாக வைத்தல்
2.உடலைச் சிதைக்கும் பழக்கங்களை விடல் 3.நல்லவர் நடுவில் எப்போதும் இருத்தல், 4.நன்மை நிகழும் இடங்களில் இருத்தல்
5.பொது நலம் கருதி உடல் உழைப்புச் செய்தல்.
உடலைப் பேணுதல் :
==================
1.உடலை தூய்மையாக வைத்தல்
புறந்தூய்மை நீரான் அமையும், கந்தையானாலும் கசக்கிக் கட்டு என புறத் தோற்றத்தில் தூய்மையையும் நம் முன்னோர்கள் வலியுறுத்தினார்கள்.
2.உடலைச் சிதைக்கும் பழக்கங்களை விடல்
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி என்ற தொடரை நாம் கேட்டதுண்டு. அதனால் உடலை வதைத்தால் உள்ளொளி பெருகும் என்ற தவறான பொருள் உணர்கிறோம்.
இதே குழப்பம் திருமூலருக்கும் ஏற்பட்டது.
உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து ஓம்பு கின்றேனே…
என்று தமது திருமந்திரத்தில் திருமூலர் தான் உணர்ந்ததைச் சொல்கிறார்.
3.நல்லவர் நடுவில் எப்போதும் இருத்தல்
4.நன்மை நிகழும் இடங்களில் இருத்தல்
5.பொது நலம் கருதி உடல் உழைப்புச் செய்தல்.
இப்படி இந்த உடலைக்காத்து
உடல் சார்ந்த நற்செயல்களில் ஈடுபட்டாலும் மனமும் சொல்லும் பழக்க தோஷத்தால் தீய எண்ணங்களைச் சிந்திக்கும், கடுஞ்சொல் பேசும்.
நம்மைக் காண்போர் ” மனுஷன் இவ்ளோ நல்ல காரியம் பண்றாரு! சொல் சுத்தம் இல்லயே! தப்பால்ல சிந்திக்கிறாரு!” என்று அங்கலாய்ப்பார்கள். அதைக் கேட்கும் நமக்கு மேலும் கோபம் வரும்.”அவர்கள் சொல்வது உண்மை. நாம் உடல்சார்ந்த நல்ல வழியிலே செல்லத் தொடங்கி இருக்கிறோம். இன்னும் சிந்தனை,சொல்லில் தூய்மை வரவில்லை!” என்று நாம் நமக்குச் சொல்லி முன்னேற வேண்டும். சண்டைக்கு நிற்கக் கூடாது.
#ஆன்மீகம் #அறம்4
(தொடரும்)