கதிரவன்,மேகம்,மழை,வானவில்!

கதிரவன் – ஏக இறைவன்
மேகம் – மனம்
மழை – எண்ணங்கள்
வானவில் – அநேக இறைவன்

ஏக இறைவன்
=============
சூரியனின் திசையில் பார்த்தால் ஏக இறைவன் மட்டும்!

வானவில் இல்லை! உருவம் இல்லா இறைவன் மட்டும் உண்மை!
அநேக இறைவன்
===============
மனம்,எண்ணங்கள் உள்ளவரை அநேக இறைவன் வானவில்லின் ஏழு வர்ணங்கள் போல விநாயகர்,முருகன்,சிவன்,விஷ்ணு, சக்தி, சூரியன் வழிபாடு.

சூரியனின் எதிர்த்திசையில் பார்த்தால் வானவில்!

ஏக இறைவனை மட்டும் உணரும் நிலை
==================================
மேகம் அழிந்தால் மழை நின்றுவிடும்!

வானவில் மறைந்துவிடும்!

சூரியன் மட்டும் ஒளிரும்!

மனம் அழிந்தால் எண்ணங்கள் அழியும்!

பல இறைவடிவ வழிபாடு தானே நிற்கும்!

எங்கும் இறைவன் நீக்கமற நிறைந்த நிலை உணர முடியும்.

ஞானி சூரியன் மேகம் வானவில் மூன்றையும் பார்க்கும் பக்குவம் உள்ளவன்!

பக்குவமற்ற ஒருவன் ஒரே ஒரு திசை நோக்கி
“சூரியன் தான் நிஜம் ! வானவில் இல்லை !” என்கிறான்.

” வானவில் தான் நிஜம்! சூரியன் இல்லை !” என்கிறான் இன்னொருவன்.

உள்நோக்கு ஏகனைக் காட்டும்!

வெளிநோக்கு அநேகனைக் காட்டும்!

மனமழிந்தால் அனைத்தும் இறைவன் என்ற நிலையை உணரும் பக்குவம் வரும்!

இறைவனில்லை!
================
கண்ணை மூடிக் கொண்டால் சூரியன் மேகம் மழை வானவில் இல்லை!

அதுவும் உண்மையே!

” கூடி விளையாடு பாப்பா!
ஒரு குழந்தையை வையாதே பாப்பா!

தெய்வம் நமக்குத் துணை பாப்பா !
ஒரு தீங்குவர மாட்டாது பாப்பா!”

கோப்பை,அண்டா,ஏரி என் குருக்கள்!

2,5,8,10 என்ற என் பதிவின் விளக்கம் கேட்டிருந்தார் நண்பர் K Akbar.
இதற்கு இரண்டு விளக்கங்கள் உண்டு.

முதல் விளக்கம் இதோ!

ஒரு சிறிய கோப்பையில் உள்ள நீரில் ஒரு  கல்லை ஒரு 5 அங்குல உயரத்திலிருந்து  போட்டால் அலைகள் உருவாகி கோப்பையின் சுவற்றில் மோதி எதிரலையாக திரும்பி அலையோடு பலமுறை மோதி கொந்தளிப்பு ஏற்படும்.

ஒரு பெரிய கொப்பரையில் அதே கல்லை அதே உயரத்தில் இருந்து  போட்டால் அலைகள் வரும் எதிரலைகள் தாமதமாக வரும். நீர் கொந்தளிக்காது .

அதே கல்லை அதே உயரத்தில் இருந்து ஏரியில் போட்டால் அலை எழும்பும். வீரியம் குறைந்து இருக்கும். அலைகள் கரையை அடைந்து  எதிரலை ஏற்பட வாய்ப்பில்லை.

அறிவியல் கூற்றுப்படி ஒரு கல் தன் கன அளவு அதாவது volume க்கு ஈடான நீரையே இடம் பெயரச் செய்யும்.

ஒரே பருமனும் எடையும் உள்ள ஒரு கல் ஒரு கோப்பை,அண்டா,ஏரியில் உள்ள நீரில் ஒரே உயரத்தில் இருந்து விழுந்தால் எழும் அலை,எதிரலை எதனால் மாறுபடுகிறது?

அது விழும் நீரின் அளவைப் பொறுத்ததே!

அதாவது  நம்மைப் போன்ற பாமரன்,ஓரளவு பக்குவப் பட்டவன் மற்றும் ஞானி இவர்களின் மனம் முறையே ஒரு கோப்பை,அண்டா மற்றும் ஏரிக்கு ஒப்பிடலாம்.

“அடே! முட்டாள்! அடியே! முட்டாள்! ” என்று நம்மை யாராவது சொன்னால் நம் கண்கள் சிவக்க சொன்னவரின் பரம்பரையையும் சேர்த்திழுத்து செந்தமிழில் “கரும்” ஆங்கிலத்தில் “பச்சை பச்சையாக” வசைபாடிவிடுவோம்! இது 2-5 நொடிகளில் நடந்து முடிந்துவிடும்!

ஓரளவு பரந்த மனம் உள்ளவர் சில விநாடிகள் கழித்து  தான் வருந்துவதை முகத்தளவில் எதிர் வினையாகக் காட்டுவார். அண்டாவில் சிறிய எதிரலை போல! இது ஒரு 5-8 நொடிகளில் நிகழும்.

நன்கு பழுத்த ஞானி இவை அனைத்தும் வெறும் சொற்களே. நம்மை பாதிக்காது. நாம் உடலல்ல. ஏதோ கர்மவினை காரணமாக நமக்கு இது நிகழ்கிறது என மௌனம் காப்பார். எந்த எதிர்வினையும் இருக்காது ,ஏரி நீர் போல.
மாறாக மேலும் புன்முறுவல் பூத்து வைதவரை வாழ்த்தி நன்றியும் தெரிவிப்பார்கள்! இது 10 விநாடிகள் தாண்டி நடக்கும் எதிர்வினை!

இந்த கால அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும் அவரவர் மனதின் பரப்பளவைப் பொருத்து!

கீழே 2,5,8,10 என்ற என் பதிவு !

2,5,8,10
=======
2 விநாடி மௌனம் காக்கப் பழகினேன்!
சினம் தவிர்த்தேன்!
5 விநாடி மௌனம் காக்கப் பழகினேன்!
மனிதனானேன்!
8 விநாடி மௌனம் காக்கப் பழகினேன்!
நல்ல மனிதனானேன்!
10 விநாடி மௌனம் காக்கப் பழகினேன்!
புனிதனானேன்!
தவறு என்ற எண்ணம்,
தவறாய் இருக்கலாம்,
எனக்கு முழு பின்னணியும் தெரியாதோ?,
நல்ல வேளை நான் வாயைத் திறக்கவில்லை!,
மற்ற கோணங்களை அறிந்தபின் இப்போது தான் உண்மை தெரிந்தது
என மனம் பயணிக்கும் காலம் 10 விநாடியே!

ஆன்மீகம்-64

ஆன்மீகம் இரண்டாம் பகுதி
=======================
வானவில்
=========
ஆன்மீகம்-64
===========
3 Feb 2019
அறம்-4
=======
அறம் இல்லத்தில் காப்பவள் பெண்!

அவள் அறத்தின் ஆணிவேர்! 

அதற்கு கணவன் உறுதுணையாய் இருப்பது அவசியம்.

அறத்தை பயன் தூக்காமல் கடமையாய்ச் செய்வதை யக்ஞம் என்று குறிப்பிடுகிறோம். அந்த கடமைகள் ஐந்து வகைப்படும்.

நீத்தார்,தேவர்கள்,மனிதர்கள்,மற்ற உயிர்கள்,நூல்கள் இவை அனைத்தையும் காப்பது இல்லறத்தாரின் ஐந்து கடமை அல்லது பஞ்ச யக்ஞம் எனப்படும் என்று பார்த்தோம்.

பிறன்மனை நோக்காது வணங்கத்தக்க வாழ்க்கை வாழும் பேராண்மையே ஆண்கள் பேண வேண்டிய அடிப்படை அறம்!

சரி. நல்துணை அமைந்த கணவன் மனைவி அறச் செயலில் ஏன் ஈடுபடவேண்டும்?
தம் மனம் போல வாழலாமே! அவர்களை தட்டிக் கேட்ப்போர் யாருமில்லை. யாருக்கும் கட்டுப்பட்டவர்கள் அல்ல.கண்காணிப்பார் இல்லை என்பது நம் அறியாமையே!

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்
கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவொழிந் தாரே! – திருமூலர்

கண்காணிப்பவன் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் இறைவனே. இதையே பல மதங்கள் பல வகையாக வலிறுத்துகின்றன. இறையச்சம் என்கிறது இஸ்லாம்.

சிந்தனை சொல் செயல் இவை மூன்றாலும் அறவழி நடப்பது நமது குறிக்கோள்.  ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. செயலிலே அறம் செய்ய முயல்வது எளிதான முதல் படி.

1.உடலை தூய்மையாக வைத்தல்
2.உடலைச் சிதைக்கும் பழக்கங்களை விடல் 3.நல்லவர் நடுவில் எப்போதும் இருத்தல், 4.நன்மை நிகழும் இடங்களில் இருத்தல்
5.பொது நலம் கருதி உடல் உழைப்புச் செய்தல்.

உடலைப் பேணுதல் :
==================
1.உடலை தூய்மையாக வைத்தல்

புறந்தூய்மை நீரான் அமையும், கந்தையானாலும் கசக்கிக் கட்டு என புறத் தோற்றத்தில் தூய்மையையும் நம் முன்னோர்கள்  வலியுறுத்தினார்கள்.

2.உடலைச் சிதைக்கும் பழக்கங்களை விடல்

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி என்ற தொடரை நாம் கேட்டதுண்டு. அதனால் உடலை வதைத்தால் உள்ளொளி பெருகும் என்ற தவறான பொருள் உணர்கிறோம்.
இதே குழப்பம் திருமூலருக்கும் ஏற்பட்டது.

உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து ஓம்பு கின்றேனே…
என்று தமது திருமந்திரத்தில் திருமூலர் தான் உணர்ந்ததைச் சொல்கிறார்.

3.நல்லவர் நடுவில் எப்போதும் இருத்தல்
4.நன்மை நிகழும் இடங்களில் இருத்தல்
5.பொது நலம் கருதி உடல் உழைப்புச் செய்தல்.

இப்படி இந்த உடலைக்காத்து
உடல் சார்ந்த நற்செயல்களில் ஈடுபட்டாலும் மனமும் சொல்லும் பழக்க தோஷத்தால் தீய எண்ணங்களைச் சிந்திக்கும், கடுஞ்சொல் பேசும்.

நம்மைக் காண்போர் ” மனுஷன் இவ்ளோ நல்ல காரியம் பண்றாரு! சொல் சுத்தம் இல்லயே! தப்பால்ல சிந்திக்கிறாரு!” என்று அங்கலாய்ப்பார்கள். அதைக் கேட்கும் நமக்கு மேலும் கோபம் வரும்.”அவர்கள் சொல்வது உண்மை. நாம் உடல்சார்ந்த நல்ல வழியிலே செல்லத் தொடங்கி இருக்கிறோம். இன்னும் சிந்தனை,சொல்லில் தூய்மை வரவில்லை!” என்று நாம் நமக்குச் சொல்லி முன்னேற வேண்டும். சண்டைக்கு நிற்கக் கூடாது.

#ஆன்மீகம் #அறம்4
(தொடரும்)

ஆங்கிலேயன் வைத்த அக்கினிக் குஞ்சு!

ஆங்கிலேயன் மாய வலை விரித்தது  முதலில் அந்தணர்களுக்கே!
1.சமஸ்க்ருத கல்வி ஒழித்தான்.
2.பாம்பாட்டிகள் என பரப்ப புத்தகங்கள் வெளியிட்டான்.
3.அந்தணர் வேதம் கற்பது குறைந்தது.
4. வேத சடங்கு வேள்விகள் வழிபாடு குறைந்தது
5. அந்தணர் விவசாய சொத்துக்கள் பறிக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்கு தவிக்க வைத்தான்
6. பிடிபட்ட காட்டு யானை பசி தாகத்தால் சொன்னபடி கேட்ப்பது போல அந்தணர்கள் ஆங்கிலக் கல்வி கற்றனர்.
7. வேதம், அந்தணர் சரிந்தனர்
8. பணம் பட்டம் ஆசையில் உயர்வு தாழ்வு கற்பித்தான்.
9. அந்தணர்களை முற்றிலும் தனிப்படுத்த ஆரிய திராவிட கற்பனைக் கதையை உருவாக்கி பரப்பினான். மக்கள் சமஸ்க்ருதம் மறந்ததால் உண்மை அறியாமல் திரித்துக் கூறப்பட்ட ஆங்கில நூல்களை வேதவாக்காக நம்பினர்.
10.வேதங்களை மொழி பெயர்ப்பதாக தாறுமாறாக மொழி பெயர்ப்பு செய்தான்.
11. இதற்கிடையில் வேதநெறியில் வாழ்ந்து எல்லா உயிரும் ஒன்று என்ற சிந்தனையுடன் இருந்த அந்தணர்கள் பட்டம் பதவி வந்ததும் தாங்கள் மற்றவரைவிட உயர்ந்தவர்கள் என நம்பத் தொடங்கினார்கள்.
12. சாதிக் கொடுமைகள் தொடங்கின. ஆரிய திராவிட பிளவு மேலும் சாதிகளைக் கூறு போட்டது
13. வேதவாழ்வு அழிந்தது. பகைமை கொழுந்துவிட்டு எரிகிறது
14. அரசியல் வாதி அதில் மானமின்றி குளிர்காய்கிறான்.
15. நாம் பார்ப்பான் ஒழிக என்கிறோம். பிரிட்டிஷ் காரன் போனதும் வேதவாழ்விற்கு அந்தணர்கள் மாறி கொஞ்சம் கொஞ்சமாக மாறி இருக்க வேண்டும். ஆனால் பணம் பட்டம் அதிகாரம் அவ்வளவு எளிதில் விட மனம் வராது.
16. இதற்கிடையில் மொழிவாரி மாநிலம் இந்து முஸ்லீம் ப்ரச்சனை….. இப்படி பல சேர்ந்து கொண்டன.
17. நாலாம் வர்ணத்தை கோவிலில் விடாததைப் போன்ற அறிவற்ற செயல் எதுவும் இல்லை. கோவில்கள் உருவானதே அனைத்து இந்துக்களுக்கும்! அதிலும் அந்தணர்களுக்கு கோவில் போக வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் வீட்டில் மூன்று கால வழிபாடு செய்தாலே சித்தராக யோகியாக ஞானியாக வாழலாம்! அவ்வளவு கடுமையாக வழிபாடு செய்ய இயலாதவர்களுக்காகவே கோவில்கள் உருவாகின.இறை ஆற்றல் அனைவரையும் அடையவேண்டும் என்ற பரந்த நோக்கத்திலேயே . இதில் வேதம் கற்ற அந்தணர்கள் பணி முறையாக பூஜை செய்து அந்த கோவில்கள் அதிர்வுகளைத் தக்க வைக்கும் பொதுப்பணியே.
மற்றவரை அடக்கி ஆளவோ கோவில்களை உரிமை கொண்டாடவோ மற்றவரை உள்ளே வராமல் தடுக்கவோ இல்லை.
18. இந்த ஆலய அனுமதி மறுப்பு எந்த அடிப்படையில் என்பதே இதுவரை எனக்கு விளங்கவில்லை!
19. ஞான சம்பந்தர், ராமானுஜர்,……. இப்படி நாடெங்கிலும் ஆலய அனுமதி மறுப்பை எதிர்த்து நடவடிக்கை எடுத்தார்கள்.
20. திரு.ஈ.வெ.ரா. நாயக்கரும் நல்லவரே. சம்பந்தர்,இராமானுஜர் ,….. சொல்லியும் திருந்தாததால் அவர் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சொன்ன விதம் கடுமை. சொன்ன சொற்கள் கடுமை. கருத்து சரியே.
இதையும் யாரும் கேட்கவில்லை. அடுத்து வந்தது இறைமறுப்பு.
இறைமறுப்பு கலந்ததும் அவர் சொல்ல வந்த செய்தி சாதி அவலங்கள் பின்னுக்குத் தள்ளப்பட அந்தண இந்து மத எதிர்ப்பாய் தடம் புரண்டது.
21. இந்துமத கடவுள் மட்டும் இல்லை என்ற வாதம் சிறுபிள்ளை கூட ஏற்காது. அதனால் இன்றும் சாதியின் பெயரில் கொடுமை தொடர்கிறது. மேலும் தொடரும். ஏனென்றால் அதில் அரசியலின் அச்சு இணைந்து உள்ளது.
22. இதில் திரு.ஈ.வெ.ரா.வின் பிரிட்டிஷ் ஆதரிப்பு சுய ஒழுக்கக் குறைவு இந்துமத கடவுள்களை மட்டும் எதிர்த்தது அவரது உண்மையான கருத்துக்களை நீர்க்கச் செய்தது. இந்நிலையில் வழிபாடு கூடாது என்றவருக்கு அவரது கொழுந்துகள் சிலைவைத்து மாலையிட்டு பூஜை செய்தது அவரது கொள்கைகளை தெருவில் இட்டு உடைத்தது!
23. இன்றும் சாதிக் கொடுமை நடக்கிறது. அந்தண எதிர்ப்பு ஒரு நகைச்சுவையாக கொள்ளப்படுகிறது. அந்தணர்கள் அதை பெரிது படுத்துவதில்லை.நல்ல அந்தணர்களின் வெறுப்பையும் சம்பாதித்தாகிவிட்டது.

ஆங்கிலேயன் வைத்த வெறுப்பு என்ற அக்கினிக் குஞ்சு ! வெந்து தணிந்தது இந்தியா!
எய்த ஆங்கிலேயன் இருக்க அந்தணர்களை நோகிறோம்!
காஞ்சிப் பெரியவர் அருள்மொழியால் பலப்பல அந்தணர்கள் வேதவாழ்விற்கு திரும்பி வருகிறார்கள்.
வேதம் செழிக்கும். சாதிகள் தொடரும். உயர்வு தாழ்வு அழியும்.
இந்தியா தங்கத் தீபகற்பமாய் மீண்டும் ஒளிரும். இதற்கு சனாதனம் போதிக்கும் அறவாழ்க்கை வேண்டும்.  அதற்கு இந்துமதம் காப்பாற்றப்பட வேண்டும்!