நான் மூடன்!

என்னைச் செதுக்க இறைவன் தந்த உளியை உலகைச் செதுக்க உபயோகிக்கும் மூடன் நான்!

தேடு!தேடாதே!

அறிவைத் தேடாதே!

உன்னைத் தேடு!

அல்லது

இறைவனைத் தேடு!

அறிவு,ஞானம் நாய்க்குட்டி போல உன்னைத்தான் தொடரும்!

வாட் அ க்யூட் பப்பி? என வியக்கும் உலகம்.

நானும் சிவலிங்கமே!

மிக்ஸி என் குரு!

பரம்பரை பரம்பரையாக பூஜை செய்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய சோம்பல்பட்டு பழச்சாறு அடித்துக் குடிக்க முயன்றேன். பழச்சாற்றை வாரி இரைத்து “ நானும் சிவலிங்கமடா மகனே! என்னை நீரூற்றிக் கழுவி சுத்தம் செய்!” என சொல்லாமல் சொன்னது மிக்ஸி!

புத்தி வந்தது! குருவே சரணம்!

மூன்று விறகுகள்!

இல்லற அடுப்பில் அறம்,பொருள்,இன்பம் என்ற மூன்று விறகுகள்!

உலை கொதிக்கிறது!

தன்னலங்கருதா கடமை எனும் அரிசியை உலை நீரில் போடாதவரை நீர் கொதிப்பு அடங்காது!

துறவி மூன்று விறகுகளை அடுப்பிலிருந்து  இழுத்து உலைநீரை ஊற்றி அணையச் செய்கிறான்!

நீரும் இல்லை! விறகும் இல்லை! கொதிப்பும் இல்லை!

காமத்துப்பாலும்! காட்சிப் பாலும்!

காமத்துப் பால் முக்கியம்!
காட்சிப் பால் தேவையற்றது!

பருவமடைய அடைய ஆண் பெண்ணைத் தேடுவது பெண்ணை ஆண் தேடுவது மொட்டு மலராவது போல சுகமான அனுபவம்!

பெண்ணைக் காட்சிப் படுத்தும்போது மொட்டின் மீது வாசனைத் திரவியங்களைப் பூசி வண்டுகளை வன்முறையாக வரவழைப்பது தேவையற்றது!

ஆன்மீகம்-33

23 June 2018
வானவில்
========
நம் பாவங்கள் அதாவது கர்மவினைகள் நம்மை தாக்கும்போது மகான்கள் சித்தர்கள் ஞானிகள் எப்படி நம்மைக் காக்கிறார்கள்?
ஒரு சிலவற்றை இங்கே பார்ப்போம்.

ஒன்று நம் கர்மவினையை அவர்கள் ஏற்றுக் கொண்டு அனுபவிப்பது!

இரண்டாம் முறை அந்தப் பாவத்திற்கு பரிகாரம் போல ஒரு செயலைச் செய்யச் சொல்வது அல்லது தாங்களே செய்வது!

மூன்றாம் முறை பாவ புண்ணியங்களின் வரிசையை மாற்றி அமைப்பது!

நான்காவது முறை மேலும் ஆச்சரியமானது. மகான்கள் தங்கள் பழைய பிறவி வினைகளை உயிரற்ற ஜடப்பொருளின் மீது தற்காலிகமாக இறக்கி வைப்பது!

நம் கர்ம வினையை அவர்கள் அனுபவிப்பது! இது மிகக் கொடுமையானது!

1.காஞ்சிப் பெரியவர் ஒரு பக்தரின் தீராத வயிற்று வலியைத் தான் வாங்கிக் கொண்டு துடியாய்த் துடித்தார்! இதைத் தாங்க முடியாத அவரது பணிவிடைத் தொண்டர் ரகசியமாக பெரியவரிடம் சொல்லாமல் வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போய் வயிறு உருவாரம் வாங்கிச் சாற்றச் சென்றார். அந்த வயிறு உருவாரம் மிக அரியது. அதையும் பெரியவரே தன் கருணையால் தொண்டருக்கு கிடைக்கச் செய்தார். தொண்டர் திரும்பி வந்ததும் “வயிறு உருவாரம் சாற்றினாயோ? ” என்றார் புன்னகையுடன்.
2. ராமக்ருஷ்ண பரம ஹம்ஸர் பக்தர்களின் கர்மவினைகளை தான் ஏற்றுக் கொண்டு விடுவார். ஒருமுறை இதைத் தவிர்க்க அவரது தொண்டர்கள் முயன்றனர். பல காலமாக விபசாரத்தில் ஈடுபட்டு பல நோய்களுக்கு ஆளான ஒரு பெண் தொண்டை புற்றுநோயால் அவதிப்பட்டாள். தொண்டர்கள் அவள் பரமஹம்ஸரைத் தொடாமல் தடுத்தனர். அவள் ஓடிச் சென்று அவரது காலைக் கட்டிக் கொண்டு தன் பாவங்களை மன்னிக்க வேண்ட பரமஹம்ஸரும் ஏற்றுக் கொண்டுவிட்டார். இறுதிக் காலத்தில் அதே தொண்டை புற்று நோயால் இரத்தம் கக்கி வாய் பேசமுடியாமல் இறுதி நாள்வரை அந்த பாவங்களைத் தாங்கினார்! இறுதி நாட்களில் அவர் தன்னால் பேசமுடியவில்லை என்று கரகரத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தார். அவரை நன்றாக அறிந்த சீடர் ஒருவர் ” ஸ்வாமி இதெல்லாம் நடிப்புதானே! உங்கள் முகத்தில் ஆனந்தம் தான் எனக்குத் தெரிகிறது!” என்றார். பரமஹம்சர் குபீரென்று சிரித்துவிட்டு ” என் குட்டு வெளிப்பட்டுவிட்டது! கண்டுபிடித்துவிட்டாயே!” என்றார். மகான்கள் உடலை சட்டையாக அணிந்தவர்கள். அவர்களை உடல் உபாதைகள் பாதிக்காது.
3. ரமண மகரிஷியிடம் ஒரு பக்தர் தான் அதிக பாவங்கள் செய்ததாக புலம்பிக் கொண்டே இருந்தார். பல நாள் பொறுத்த இரமணர் ” உன் புண்ணியங்களை எல்லாம் எனக்குக் கொடுத்துவிடு !” என்றார்.
பக்தர் ” நான் பாவி . என் புண்ணியங்கள் என்று பெரிதாக ஒன்றுமில்லை!” என்றார்.
” இருப்பதைக் கொடு!” என்றார். அவரும் தந்தேன் என தந்துவிட்டார். ” இப்போது உன் பாவங்களை எல்லாம் கொடு !” என்றார். பக்தர் பதறிவிட்டார். ” இவை மிகப் பெரிய பாவங்கள். இதை தரமாட்டேன்!” என்றார். இரமணர் பலவாறு வாதாடி அத்தனை பாவங்களையும் பெற்றுக் கொண்டார். அதற்குப் பின் அந்த பக்தர் திரும்ப வரவேயில்லை!

இரண்டாம் முறை பரிகாரம் செய்வது!
1.திருவண்ணாமலையில் சேஷாத்ரி ஸ்வாமிகள் என்ற பெரிய சித்தர் இருந்தார். ரமணரைக் காப்பாற்றி நமக்குக் கொடுத்தவர். அபிராமிபட்டரின் மறு அவதாரமாகக் கருதப்பட்டவர்!
ஒரு முறை ஒருவரை தெருவிலே போகும்போது அந்த நபரின் செருப்பைக் கழற்றி சிலமுறை அடித்துவிட்டார். அன்று ஒரு பெரிய வழக்கில் அந்த நபருக்கு சாதகமாக தீர்ப்பானது! அவர் பட வேண்டிய கர்மவினையால் வரவேண்டிய அவமானத்தை இப்படி நீக்கினார்!
2. வாயால் உணவு உண்ணமுடியாமல் வயிற்றில் வைக்கப்பட்ட குழாய் மூலமாக மட்டும் உணவு உண்ண முடிந்த கல்கத்தாவைச் செல்வந்தர் காஞ்சிப் பெரியவரிடம் வேண்டி நிற்க, பதினெட்டு புராணங்களை நாடெங்கும் அலைந்து தொகுத்து திரட்டி அச்சிட்டு வெளியிடச் சொல்லி கர்மவினை முடித்து முன்பு போல் வாயால் உணவு உண்ண அருள் செய்தார் காஞ்சி மஹாப் பெரியவர்!

குருவருளால் இயலாதது ஒன்றும் இல்லை! அதனால் கர்மவினை நீங்க குருவைச் சரணடைதல் இந்து மதத்தில் மிகச் சிறப்பாக சொல்லப்படுகிறது!

இதே போலத்தான் நம் பாவங்களையெல்லாம் இயேசு ஏற்க சிலுவையில் அறையுண்டார் என கூறப்படுகிறது!

இன்று போலிச்சாமியார்கள் பாதிரிகள் மௌல்விகள் மலிந்து மதங்களை மனங்களை நாசம் செய்கிறார்கள்!

அடுத்த பதிவில் பாவபுண்ணியங்களை வரிசை மாற்றம் செய்தல்,பாவத்தின் பலனை ஜடப் பொருள்களின் மேல் ஏற்றுதல் போன்றவற்றைப் பார்ப்போம்!

பாவபுண்ணியங்கள் பெரிய பொருட்டல்ல! ஆனால் பலரும் பயப்படும் பயம் நீங்கவே இவ்வளவு ஆழமாக பல பதிவுகளில் சொல்லிச் செல்கிறேன்!
உண்மையான ஆன்மீகம் இன்னும் எழுதத் தொடங்கவே இல்லை! பாவ புண்ணிய சிந்தனைகள் மிக மிக மிக தாழ்வான சிந்தனைகள்! ஆனால் இவற்றை விளக்கவில்லையென்றால் நம் மனம் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ளாது! அதனால் அந்தக் கேள்விகளுக்கு விடை தந்து மனதை அமைதிப்படுத்தியே உண்மை ஆன்மீகம் பேசவேண்டும்! இல்லையென்றால் நம் சிற்றறிவு பாவ புண்ணியங்களையே “கட்டி” அழும்!
எவ்வளவு கோடிக்கணக்கான பாவம் செய்தாலும் முயற்சியால் பிறப்பிறப்பற்ற நிலை அடைய முடியும்! இதில் யாரும் ஸ்பெஷல் இல்லை!😀😁🤣
( தொடரும்)

என்ன விரட்டலயா!

வாழ்க்கை கசக்க கசக்க நிலையாமை உணர்வோம்! அது இறைவனின் கொடை! புரிய பலவருடம் ஆகும்! புரியும்போது புன்முறுவல் வரும்! வடிவேலு கோழி பேரம் பேசும்போது பலர் விரட்டி ஓடிவர தன்னைத் தான் என்று பல கிமீ ஓடி தன்னை அல்ல என உணரும் மொமன்ட் எல்லாருக்கும் வரும்!
நமது உலகவாழ்வு நிலையானது என்ற அறியாமையைத் தான் அது விரட்டுகிறது!
கடவுளே கதி என்று வாழ்பவர்களை இன்னும் விரட்டும்!
கடவுளுக்கு, துன்பத்தில் நம் நேர்மை கண்ணியம் கட்டுப்பாட்டை மற்றவர்களுக்கு டெமோ கொடுப்பதில் மகிழ்ச்சி ! ” பண்பட்டவனைப் பாரடா!” என்று!

பசித்தவன் உணவைத் தேடுகிறான்!
களைத்தவன் உறக்கம் தேடுகிறான்!
இதை அடைந்தவன் காமம் தேடுகிறான்!
காமம் தீர்ந்தவன் கலையைத் தேடுகிறான்!
கலையில் சலித்தவன் கருவிகளைத் தேடுகிறான்!
கண்டுபிடிப்பில் சலித்தவன் தன்னைத் தேடுகிறான்!
தன்னைத் தேடுபவன் கடவுளைக் காண்கிறான்!
கடவுளைத் தேடுபவன் தன்னைக் காண்கிறான்!

தன்னைக் கண்டவன் தயையில் நிலைக்கிறான்!
கடவுளைக் கண்டவன் கடவுளாகிறான்!

மனிதம் புகுந்த மனது!

மனிதம் ஏதோ ஒரு மனிதர் மூலம் நிகழ்வு மூலம் உங்களுள் புகுந்துவிடும்.அந்த விழிப்புணர்வு உங்களைச் சுற்றி ஒரு ஆன்மீக நறுமணத்தை உருவாக்கி பலப்பலப்பல நல்லோர்களை ஈர்க்கும்! அதன் பின் உங்கள் சிந்தனை உன்னதமான நிலைக்கு உயர்ந்துவிடும். உங்கள் எண்ணங்களும் செயல்களும் உங்களையே ஆச்சரியப்படுத்தும்! கடவுள் தடுத்தாட்க் கொள்வது என்பது இது தான்! கடவுள் சங்கு சக்ர கதா தாரியாக இப்போதைக்கு வரமாட்டான். ஆனால் அப்படியும் வருவான் காஞ்சிப் பெரியவர்,விவேகானந்தர்,பரமஹம்ஸர் … என மாறினால்! அதுவரை இறைவன் மனித உருவில் தடுத்தாட்க் கொள்வான்! இது கப்ஸா இல்ல ! சத்தியம்!

பட்டினத்தாருக்கு அவரது மகன் வடிவில் மெசேஜ் ” காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!”