போலி குருக்கள் நமக்கு அமைவதேன்?

நம் மனத்தின் தூய்மைக்குத் தகுந்த குருவே நமக்குத் தோன்றுவார். மக்கள் தின வழிபாடுகள் ஏதோ கீழானது. பெரிய மந்த்ரோபதேசம் தேவை என்று தவறாகப் புரிந்து கொண்டு குருக்களைத் தேடிப் போகிறார்கள்.

மேலும் உலக இன்பதுன்பங்களில் உதவி பெறவே குருக்களைத் தேடுகிறார்கள். தினமும் செய்யும் மூவேளை வழிபாடுகளால் நம் மனது தூய்மையாக தூய்மையாக சத்குரு நமக்குத் தோன்றுவார்.

பால்காரர் வரும் முன் நாம் செய்ய வேண்டியது பால்வாங்கும் பாத்திரத்தை நன்றாக கழுவித் தேய்த்து உலர்த்தி வைக்க வேண்டும். அதுவே தின வழிபாடும் நல்லொழுக்கமும் நற்சிந்தனையும் தரும் பலன்.

பாத்திரம் கழுவி இருந்தால் பால்காரர் தேடி வந்து பால் ஊற்றுவார். அவரே குரு.

நாமோ பால் பாத்திரத்தைத் தேய்க்காமல் தெருத்தெருவாய் பால்காரரைத் தேடி அலைகிறோம். பாலும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் பால் திரிந்துவிடுகிறது.

அதாவது அன்றாட வாழ்விற்கான வேண்டுதல்களையே குருவிடம் வைக்கிறோம். காலப்போக்கில் அப்படிப்பெற்ற அனைத்தும் அழிந்து போகிறது.

குறை நம்மிடமே இருக்கிறது!

#போலிகுருக்கள்நமக்குஅமைவதேன்

கர்ம வினைகளும்,தாக்கமும், அதனின்று விடுபடலும்!

Swarnakanthi Kumarasamy அம்மா ஒரு வினாவை வைத்தார்.
கல்வி இருந்தால் செல்வம் சேர்வதில்லையே ஏன்? இதுதான் நியதியா?

இல்லையம்மா!

நம் கர்மவினைகள் மூன்று வகைப்படும்.

பலகோடி பிறவிகளில் நாம் விரும்பியவை ஆசைப்பட்டவை ஒரு கிடங்கில் ஒரு குவியலாகக் கிடக்கும்.

நாம் செய்த வினைகள் ஒரு குவியலாகக் கிடக்கும்.
இந்த கிடங்கில் சேர்ந்த குவியல்களின் பெயர் சஞ்சித கர்மா.

அதாவது சேமித்த வினை.

இந்த பிறவி எடுக்கும் போது கிடங்கில் இருந்து சில ஆசைகளையும்(பெரிய இசைக் கலைஞனாக ஆகவேண்டும் என்ற ஆசை) கொஞ்சமும் செய்த வினையில்( நீரிழிவு நோய்,கண் குறைபாடு,இதய நோய் இப்படி) கொஞ்சமும் அந்த ஆசைகளும் வினைகளும் நிறை வேறத் தகுந்த உடலும் அதற்குத் தகுந்த ஆயுளுமே நமக்குக் கிட்டும் .

இப்படி இந்த பிறவியில் நாம் கொண்டுவரும் வினைகள் ப்ராரப்த கர்மா என்ற செயல்படு வினைகள் ஆகும்.

அதனால் இன்ப துன்பங்கள் அலைபோல வந்து போகும்.

இதை மாற்ற இயலாது.

ஆனால் அதன் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.

இதை பலமுறை ஆன்மீகத் தொடரில் எழுதி இருக்கிறேன்.

இந்த ப்ராரப்த கர்மா ,அதாவது கொண்டுவந்த வினையை நாம் அனுபவிக்கும் போது வெகுண்டு விசனப்பட்டு மற்றவரை தாக்குவது பேசுவது கெடுப்பது என்பது புதுவித வினைகளுக்கு வித்திடும்.

அதாவது சிறைக் கைதி சிறைக்குள் இருப்பவர்கள் அதிகாரிகளைத் தாக்கி மேலும் நீண்ட தண்டனையைப் பெறுவது போல! இது நம் கையில் தான் இருக்கிறது. இதைத்தான் ஊழையும் உப்பக்கம் காண்பது என்கிறார் வள்ளுவர்.

அந்த வினைகளின் பெயர் ஆகம்ய கர்மா.

அதாவது இப்போது புதிதாகச் சேர்த்த சஞ்சித கர்மா கிடங்கில் சேரப் போகும் வினை என்று பொருள்.

இந்த தெளிவு உள்ளவர்கள் யாரிடமும் பகைமை பாராட்டமாட்டார்கள்.

எய்தவன்( நாம் செய்த வினைகளே வில்) இருக்க அம்பை(நம்மீது கடுமையாக நடப்போர் உற்றார் உறவினர் நட்பு வெறும் அம்புகளே!) நோவதில்லை.

இது எளியது. ஆனால் இதை ஆழமாக சிந்தித்து நம் இன்றைய வாழ்வை சீராக்கினால் இந்த வாழ்வும் இனிதே கடக்கும்.

கிடங்கில் சேர்த்த கர்மவினைகளும் பஞ்சுப் பொதியாய் எரிந்து போகும்.

அதற்கு எளிய வழிமுறை உண்டு.

அதற்குப் பின் பிறப்பு இறப்பு இல்லை.

இது அனைவருக்கும் சாத்தியமே!

மத சாதி மொழி வயது திணை பால் நாடு வேறுபாடு இல்லை!

எல்லா தீபங்களிலும் சுடர்விடும் நெருப்பு ஒன்றே!

அதைப்போல எல்லா ஆன்மாவும் ஒன்றே!

புற வேற்றுமைகளில் உழல்பவன் மூடன்!

அதை அறிந்து தவிர்ப்பவன் ஞானி!

இவ்வளவு தான் வேற்றுமை அம்மா!🙏🙏🙏
#வினைகளின்தாக்கமும்விடுபடலும்

வெற்றியின் ரகசியம்! =======================

PAD = Plan,Act,Deliver

இதுவே நான் என்னிடம் பணிபுரிவோருக்குச் சொல்லும் மந்திரம்.

திட்டமிடாமல் வெற்றி சாத்தியமில்லை!

உழைக்காமலும் வெற்றி சாத்தியமில்லை!

திட்டமிட்டு உழைத்தால் வெற்றி சாத்தியம்!

ஆனால் நிச்சயமில்லை.

அதை ஏற்கும் பக்குவமும் வேண்டும்.
#PAD

டிஃபரன்ஸ் ஆஃப் ஒபினியன்!

பரம்பொருள் என்பது சூரியனைப் போல ஞானத்தின் அறிவின் அளவற்ற தொகுப்பு!

நாம் அனைவரும் காலம் என்ற பரப்பில் வளர்ந்த புற்கள்.

நம் மனம் அந்தப்புல்லின் நுனியில் தொங்கும் பனித்துளிகள்.

ஒவ்வொரு பனித்துளியின் அளவும் பரப்பளவும் வேறுபடும்.

அதற்குத் தகுந்த அளவு அது ஒளியை எதிரொளிக்கும் ஆற்றல் பெற்றது.

நம் மனம் எதிரொளிக்கும் பேரறிவின் ஒரு கூறே நம் கருத்துக்கள்.

பனித்துளியின் தூய்மை நம் உள்ளத் தூய்மை போன்றது.

இதில் சரி தவறு என்று எந்த எண்ணத்தையும் கருத்தையும் தீர்ப்பளிக்க முடியாது.

ஞானிகள் ஏரித் தண்ணீர் போல பரம்பொருளின் ஆற்றலை அறிவை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவர்கள்.

அவர்களுக்கு யாருடனும் சண்டை சச்சரவு கருத்து வேறுபாடுகள் இல்லாததன் காரணம் அதுவே!

எடுத்துக்காட்டு காஞ்சிப் பெரியவர்!

இம்புட்டுத்தான் மேட்டரு!

நம் உடலாகிய புல்லை காலமென்ற தோட்டக்காரன் அறுக்கும் போது மனம் அது வெளிப்படுத்திய கருத்து அனைத்தும் காணாமல் போய்விடும்.

தூய்மையான உள்ளங்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் மட்டும் காலத்தைத் தாண்டி நிற்கும்!

வாழ்க வளர்க பல்லாண்டு இறையருளால் வள நலங்களுடன்!

#எதிர்மறைகருத்துக்கள்

17மார்ச்2020

குறுக்கு வழிகள் இல்லை! இல்லவே இல்லை!

(எச்சில் இலையில் உருளும் பக்தர்கள் காணொளிக்கு என் பின்னூட்டம்!)

நம் மனதிற்கு சில கருத்துக்கள் ஒத்து வரும். சில ஒத்து வராது. இதில் சாதி காரணமல்ல. வடநாட்டில் பக்தி அதிகம். தென்னாட்டில் பஜனை பக்தி கிடையாது. மந்திர ஜபம், பூஜை உண்டு! வடநாட்டு வழிமுறைகள் நம்மை முகம் சுழிக்கச் செய்யும்! நிறைய இப்படி வழக்கங்கள் உண்டு! யோனி பூஜை கூட உண்டு! விந்து வெளியிடாத உடலுறவு வகை வழிபாடும் உண்டு! அதாவது நம் இறுதி நோக்கம் உடல் மனம் சார்ந்த பிடிகளிலிருந்து விடுபட்டு ஆன்மாவில் ஒன்றும் அந்த நிலையில் இருப்பது! இந்த உடல் கர்மவினையால் நாம் பின்னிக் கொண்ட சட்டை என்ற நிலை அடைதல்! இதுவே முக்தி! மோக்ஷம்!

யோனி பூஜை செய்து யோனியை சக்தியாக வணங்கி பின் விந்து விழாத நிலையில் மனதை குவித்தல் ஒரு வழிமுறை! மிக மிகக் கடினமான முறை! உடலுறவின் உச்சத்தில் மனதை இழுத்துக் கட்டுவது மிக மிக மிக இருபாலாருக்கும் கடினம்! இதற்கு முன் பலப்பல வழிபாடு சிந்தனை செயல் என மனத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவர்கள் மட்டுமே இந்த யோகப் பயிற்சியில் இறங்க முடியும்!

இப்படி விந்துவிழாத உடல் உறவை வெற்றி கண்டவர்கள் பலர் உண்டு! அவர்களுக்கு “ஊர்த்வ ரேதஸ், அதாவது விந்து மேல்நோக்கிய ஓட்டம் “ உள்ளவர்கள் என்ற பெயர். இதில் காமம் சார்ந்த கலவியே நம் கண்ணில் படும்! கண்ணபிரானுக்கு ஊர்த்வ ரேதஸ் என்ற பெருமை உண்டு! அது இந்துக்களுக்கு தெரியாது! நமக்கு சாதி பஞ்சாயத்திலேயே பொழுது போகிறது! அவதாரங்கள் பலவற்றை நடைமுறையில் செய்து காட்டியவர்கள்!

ஆனால் இப்படி பல ஆயிரம் ஊர்த்வ ரேதஸ்கள் யோகிகள் இருந்தார்கள்! இன்றும் உண்டு! இதையாரும் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை! விவரம் தெரியாத நாம் தான் அறிவிலிகள்! இவற்றை என் பதின்ம வயதில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் படித்த போது ஆச்சரியமாக இருந்தது! “இல்லறத்தில் இருந்தே இந்த வழிமுறைகளை கடைப்பிடிக்க முடியும்! ஆனால் கணவன் மனைவி இருவருக்குமே ஆங்கிலக் கல்வியால் காமத்தைத் தவிர ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது!” இதுதான் நிலை!

எச்சில் இலையில் உருள்வதால் தோல் வியாதிகள் குணமானவர்கள் உண்டு! சொன்னால் நம்ப முடியாது . நீங்களே தேடி கண்டு கொள்ளுங்கள்!

எச்சில் இலையில் உருள்வதால் ஈகோ குறைதல், பல பிறப்புகளில் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் ( தனியாக தீச்சட்டி, அலகு குத்தல்,மண் சோறு…… பற்றி பார்ப்போம்), உண்மையான இறை அனுபவத்தில் மூழ்கிய பக்தர்களின் அடிப்பொடி ( அடியார்க்கு அடியேன் என்ற கருத்து) என்பதை ஏற்றல் என்ற பல கோணங்கள் உண்டு!

இவற்றையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இவை சரியா தவறா என விவாதிக்க அல்ல! இப்படி நாம் அறியாத பல கோணங்கள் உண்டு என்பதை சுட்டிக் காட்டவே!

(இதனால் எனக்குக் கிடைப்பது ஒரு பயனும் இல்லை.

நமக்குத் தெரிந்ததை பகிராமல் இருப்பது தவறு என்ற ஒரே எண்ணத்தால் பொன்னான நேரத்தை இதை எழுதி செலவிடுகிறேன்!)

இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது

உணர விரித்துரையா தார்

ஆதிசங்கரர் இவற்றையெல்லாம் நீக்கி கணபதி,சிவன்,சக்தி,விஷ்ணு,முருகன்,ஆதித்தன் என வழிபாடுகளை மட்டும் நிலைநிறுத்தினார்! ஆனால் மற்ற வழிபாடுகள் தலை தூக்கத் தொடங்கிவிட்டன! மக்கள் குறுக்கு வழிகளில் புண்ணியம் தேடத் தயார்! நேர்வழி செல்ல விரும்புவதில்லை!

இது எல்லா மதத்தவர்களுக்கும் பொருந்தும்!

இயேசு சொன்னதை கடைப்பிடிப்பதைவிட மதமாற்ற ஊழியம் செய்வது எளிது என்ற அநேக கிறித்தவர்கள் உண்டு!

நபி வழி நடப்பதைவிட “ஃபத்வா கொடுக்கிறேன் அவரைக்

கொன்றுவிட்டு வா!” என்பதைக் கடைப்பிடிப்பது எளிது என்ற இஸ்லாமியர் உண்டு!

புத்தரின் அஹிம்ஸையைக் கடைப்பிடிப்பதைவிட தேரர் சொல்லும் நபரை போட்டுத் தள்ளுவது எளிது என நினைக்கும் பௌத்தர்கள் பல ஆயிரம்!

மக்களே முக்தி ,நிர்வாணம்,சுவனம்,பரலோகத்தில் உள்ள பிதா இவற்றில் எதற்கும் குறுக்கு வழி இல்லை!

பீ கேர் ஃபுல்! நான் என்னச் சொன்னேன்!

ஆன்மீக அபத்தங்கள்-1

நாம் மகான்கள் சித்தர்கள் யோகிகள் ஞானிகள் வேத உபநிடதங்கள் வாக்கின் நுண்பொருள் அறியாமல் அபத்தமாக நிறைய உளறுகிறோம்!

அவற்றில் முதன்மையானது “ அன்பே சிவம்!” . அதனால் வழிபாடுகள் தேவையில்லை. அனைவரிடமும் அன்பாக இருந்தால் இறைநிலை அடையலாம் என நாம் கூறித் திரிகிறோம்!

முழுப்பாடலையும் பார்த்தால் உண்மை விளங்கும்!

அன்பும்சிவமும்இரெண்டேன்பார்அறிவிலார்

அன்பேசிவமாவதுயாரும்அறிகிலார்

அன்பும்சிவமும்ஒன்றென்றுஅறிந்தபின

அன்பேசிவமாய்அமர்ந்துஇருந்தாரே”

அன்பும் சிவமும் ஒன்றென்று அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!

நாம் அன்பும் சிவமும் ஒன்று என்ற நிலையை இன்னும் அறியாதவர்கள்! நம் அன்பு என்பது கேள்விக் குறிக்கு உட்பட்டது! அதனால் அந்த நிலையை அடையும் வரை அன்பே சிவம்! வாழ்வே தவம்! என்று பெரிய வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பதே நன்று!

ஒரே செதுக்கு!

“கடவுள் உண்டா? இல்லையா?! ஒரே வார்த்தைல பதில் சொல்லுங்கள்!”

“ ஒரே செதுக்கில் சிற்பம் வடிக்க முடியுமா?!”

“முடியாது!”

“பல ஆயிரம் செதுக்கல் வழவழப்பாக்க உராய்தல் நீர் ஊற்றிக் கழுவுதல்… இப்படி பல செயல்களின் மூலமே சிற்பம் வடிக்க முடியும்! கல்லுக்குள் சிற்பம் இருந்தாலும் அதனை வெளிக் கொண்டு வர இவ்வளவு பாடுபடுகிறான் சிற்பி!

இதைப்போலவே நம் உள்ளத்திலேயே இறைவன் உறைந்தாலும் உலகெலாம் நிறைந்தாலும் அவனை வெளிப்படுத்த உடல் மனம் சித்தம் இவற்றை வழிபாடு அன்பு கருணை இரக்கம் உயிர்க் கொலை தவிர்த்தல் ஒருமனப்படல் என்ற மனக்குவியம் மனம் சிதறா நிலை அடைந்தால் தெள்ளத் தெளிவாக இறைவன் தென்படுவான்!

ஒரு கல்லைச் செதுக்கினால் சிற்பம் மறு கல்லில் உருவாகாது!

உன்னைத்தூய்மை செய்! உன்னுள் நீயாக இருக்கும் இறைவனைக் காண்பாய்!”

மௌனம்!

தேடு!தேடாதே!

அறிவைத் தேடாதே!

உன்னைத் தேடு!

அல்லது

இறைவனைத் தேடு!

அறிவு,ஞானம் நாய்க்குட்டி போல உன்னைத்தான் தொடரும்!

வாட் அ க்யூட் பப்பி? என வியக்கும் உலகம்.