இந்துமதத்தின் நான்கு அடிப்படை மஹாவாக்கியங்கள் என ஒவ்வொரு வேதத்தில் இருந்தும் ஒரு சொற்றொடர் உள்ளது.
ப்ரஞ்ஞானம் ப்ரம்ம – தெளிந்த ஞானமே பரம்பொருள் ; ரிக் வேதம்
தத் த்வம் அஸி – இறைவனும் நீயும் ஒன்று; சாம வேதம்
அஹம் ப்ரம்மாஸ்மி – நான் பரம்பொருள் ; யஜூர் வேதம்
அயம் ஆத்மா பிரம்ம:- இந்த ஆத்மா பரம்பொருள் ;அதர்வண வேதம்
அதுவே நம் மதத்தின் அடிப்படை.
சமஸ்க்ருதம் மிக ஆழமான மொழி. ஒரே சொல் உப்பு மற்றும் குதிரை என்ற பொருட்பட வரும். கீழே நான் காஞ்சிப் பெரியவர் அருள்வாக்கைச் சுருக்கித் தருகிறேன்.
மேலும் வேதத்தில் கர்ம காண்டம் ஞான காண்டம் என இருபிரிவுகள்.
கர்மகாண்டத்தில் மந்திரம் வேள்வி அதிர்வுகள் போன்றவற்றால் நாம் வேண்டிய அழியும் பொருட்களான உலகவாழ்வு,சொர்க்கம் போன்றவற்றை நம்மால் தேவர்களிடமிருந்து பெறமுடியும்.
இது வெறும் அதிர்வு அடிப்படையால் ஆனது. அதாவது சரியாக மந்திரங்களை உபயோகித்தால் இந்திரன், வருணன்,வாயு,அக்கினி போன்றோரை மகிழ்வித்து மழை ,நல்ல விளைச்சல்,நோயின்மை,புத்திர பாக்கியம்,….. இப்படி பலவற்றைப் பெற முடியும்.
எடுத்துக்காட்டாக தேர்தலில் வெல்லவேண்டும் என்று அயோக்கியர்களும் வேள்வி நடத்துவது! பலன் உண்டா? உண்டு.
அரக்கர்கள் வேள்வி தவம் செய்து பல சக்திகளைப் பெற்றது உண்டு.
அதிர்வுகளால் எதையும் உருவாக்க முடியும்.அதை சுயநலத்திற்காக தீயவழியில் பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடும் உண்டு!
மனிதன் வக்கிரமானவன்! தன் சகமாணவன் துரோணரை அழிக்கவேண்டி பிள்ளைவரம் கேட்க யாகம் செய்ய எண்ணினான் துருபதன். எல்லா அந்தணர்களும் அது தர்ம விரோதம் என்று மருத்துவிட ,”இரு அந்தணர்கள் இருக்கிறார்கள் நல்ல மந்திரசக்தி உள்ளவர்கள். அண்ணன் பணத்தாசை உள்ளவன். தம்பி நேர்மையானவன். அண்ணனை பணத்தால் வளைத்துவிட்டால் தம்பி சொல் கேட்ப்பான். நீ எண்ணியது நிறைவேறும் !” என அமைச்சர்கள் திருவாய் மலர வேள்வி நிகழ்ந்து ஆண் குழந்தை உருவானது.அவனே துரோணரை அழிக்க உருவான த்ருஷ்டத்யும்னன் !
தேவர்கள் “மனம் மகிழ்ந்தோம் உனக்கு ஒரு பெண் குழந்தையும் தருகிறோம் பெற்றுக் கொள் !” எனச் சொல்ல துருபதன் ” எனக்கு வேண்டாம் பெண் !” என தேவர்களை அவதூறாகப் பேசி அவமானப்படுத்தினான்.
வரம் தந்தே ஆகவேண்டிய கட்டத்தில் வெறுப்புடன் ஏடாகூடமாக “இந்தப் பெண் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படவேண்டும்,அறிவாளியாக இருக்க வேண்டும்,பலரை மணக்க வேண்டும்,பத்தினியாய் இருக்க வேண்டும்!” என ஏடாகூடமாக வரம் கேட்டு பெண் குழந்தையை அடைந்தான்.
அவள்தான் த்ரௌபதி! நான் மிகவும் வருந்துவது த்ரௌபதியை எண்ணி! அப்பன் கேட்ட வரம் அவள் ஆயுள் முழுவதும் கற்புக்குச் சோதனை!
இது எதற்குச் சொல்கிறேனென்றால் ஓரிரு அந்தணர்கள் மந்திர சக்தியைத் தவறாக பயன்படுத்துவது என்றும் இன்றும் உண்டு!
அதற்கு மந்திரங்களின் ஆளுமை பயன்பாடு தேவை. அந்த அடிப்படையில் தேவர்கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்.
மந்திரங்களை அறிந்த அந்தணர்கள் தேவர்களை வசப்படுத்தி உலகவாழ்வை செழிப்பாக நடத்தமுடியும் என்பதால் அந்தணர்கள் உயர்வானவர்கள் என்ற பொருளில் சொல்லப்பட்டது.
ஆனால் அந்தணர்கள் கடவுள் என்பது எப்போதும் உலகவாழ்வின் மேன்மை மட்டும் வேண்டித் திரிபவர்களுக்கே பொருந்தும்.
இதில் சிக்கல் என்னவென்றால் அதர்மம் செய்யும் அரசியல்வாதிகள் அரசர்கள் இதைக் குறுக்கு வழியாக ஆஹா! மந்திரத்தால் மாங்காய் வரும் என்ற நிரூபணம் ஆகிவிட்டது. அந்தணர்களுக்கு செய்யவேண்டியதைச் செய்து தேவதைகளைத் திருப்தி செய்து எதை வேண்டுமானாலும் பெறலாம். இதற்கு கடவுள் எதற்கு என்ற சிந்தனை வலுத்து பலகாலம் இப்படியே சென்று கொண்டிருந்தது.
அந்த காலகட்டத்தில் இந்த நிலைமை உருவாகியது. அதாவது எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பது ஒரு உயர்வு நவிற்சியாய்ச் சொல்வது போல! நம் ஆசிரியர் சாட்சாத் கடவுள் என்றால் நாம் நம்புவது கடினம்.
அடுத்து ஞானகாண்டம் இந்த உலகாயத போக்கை வன்மையாக கண்டித்து ” மந்திர மந்திரங்களை வைத்து வேண்டியதைப் பெறலாம்.இவை அனைத்தும் அழிபவை! மந்திர தந்திரங்களை கடந்து நீ கடவுள் என்பதை உணர் .உன்னைத் தாண்டி வேறு தெய்வம் இல்லை! என்கிறது.
இதில் பிறந்தவையே நமது அடிப்படை மகாவாக்கியங்கள்.
ப்ரஞ்ஞானம் ப்ரம்ம – தெளிந்த ஞானமே பரம்பொருள் ; ரிக் வேதம்
தத் த்வம் அஸி – இறைவனும் நீயும் ஒன்று; சாம வேதம்
அஹம் ப்ரம்மாஸ்மி – நான் பரம்பொருள் ; யஜூர் வேதம்
அயம் ஆத்மா பிரம்ம:- இந்த ஆத்மா பரம்பொருள் ;அதர்வண வேதம்
இது இறுதி நிலை.
நீண்ட நாட்களாகவே இந்த அடிப்படைகள் பற்றி காணொளி பதிய எண்ணம். நேரம் வரவில்லை! ஒரு தொடராக இந்துக்களாகிய நாம் குழுவில் பதிய எண்ணம்!