ப்ரபஞ்ச நியதியும் பழக்க வழக்கங்களும்

கண்ணன் உலகில் எதுவும் சும்மா இருப்பது இயலாத காரியம் என்கிறான்.

இயங்கிக் கொண்டே இருப்பதே ப்ரபஞ்ச நியதி.

அந்த இயக்கம் மூன்றுவித குணங்களுக்கு உட்பட்டது.

ஒன்று சாத்விகம் என்ற தன்னலமற்ற இயக்கம்.

ராஜஸம் என்ற தன்னலம் மிக்க இயக்கம்.

தாமஸம் என்ற தன்னலம் மற்றும் பொதுநலம் கருதாத இயக்கம்.

நம் மனம் இந்த மூன்று குணங்களுக்கும் மாறி மாறி உட்படும்.

அதனால் பொதுநலம் ,தன்னலம் மற்றும் எதற்கும் உதவாத அழிவுச் செயல்களில் ஈடுபடுகிறோம்.

எப்போது எந்த குணம் நம்மை ஆட்டி வைக்கும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் அதை அன்றாட பழக்க வழக்கம் என்ற ஆசாரம்( ஒழுக்கம்) என்ற பயிற்சியால் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

எடுத்துக்காட்டாக பெண்ணாக இருந்தால் காலை எழுந்து குளி,பரட்டைத் தலை ஊத்த வாயோடு சுற்றாதே,கோலம்போடு, இறை வணக்கம் செய்,வீட்டைத் தூய்மையாக வை என்றும் ஆணாக இருந்தால் காலை எழுந்து குளித்து இறைவணக்கம் செய்து தொழிலைத் தொடங்கு,நேரத்திற்கு வீட்டிற்கு வா,சம்பாதித்த பொருளை மனைவியிடம் கொடு,இறைவணக்கம் செய்,சேர்ந்து உணவு உண்,நேரத்தில் தூங்கு என்ற நியமங்களை உருவாக்கி நம் குணங்களை மாற்றி அமைக்க நம் மதத்தைக் கட்டமைத்தார்கள்.

அதை கடைப்பிடித்தால் வீடு பேறு தன்னால் கிடைக்கும் .

இல்லறமிக்க நல்லறமில்லை.
#ப்ரபஞ்சநியதியும்_பழக்கவழக்கங்களும்

மூன்று குறிக்கோள்கள்

ஓரளவு வயது கடந்ததும் நமக்கு மிஞ்சுவது மூன்று குறிக்கோள்கள்.
1. அடுத்த பிறவியை எப்படி நிச்சயிப்பது. அதற்கான பயிற்சிகளில் ஈடுபடுவது.

2. இந்த உடலை நாம் நினைக்கும்போது அல்லது விதி முடிந்ததும் வேதனை இன்றி எப்படி விடுவது

3. இந்த உடல் இருக்கும்வரை அதை எப்படி உலக நன்மைக்காக பயன்படுத்துவது

பிறவா நிலை அடைவது எப்படி?!

உறக்கம் ,உணவு,கலவி,போதை,இலக்கியம்,கவிதை,அறிவியல்,உயிர் நேயம்,ஆன்மீகம்,தேடல்,முயற்சி,இறைநிலை என்ற 12 படிகளில் பல ஆன்மாக்கள் ஏதோ ஒன்றில் சிக்கி மேலும் கீழும் செல்கின்றன.

பல பிறவிக்கு ஆளாகின்றன.

இதை அறிந்தால் மனப் பயிற்சியின் மூலம் இந்த பிறவியிலேயே பிறவா வரம் பெறலாம். நினைத்த நேரம் உடலை விடலாம். இது சாத்தியம்.

சிலர் உறக்கத்திற்கு அடிமையாக பலப்பல பிறவிகளில் சிக்கித் தவிக்கிறார்கள்.

நல்லோர் நட்பு அதை மாற்றி வாசனையை எரித்து அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும்.

தர்ப்பணம் மூடப்பழக்கமா?!

நம் உடல் பருப் பொருள். அதை நாம் தொட்டு உணரலாம். உயிரைத் தொட்டு உணர முடியாது.

இதனால் எது தெளிவாகிறது என்றால் பருப்பொருள் அதாவது ஏதாவது ஒரு solid objectன் துணையால் உயிரின் இயக்கத்தை உணர முடியும்.

அடுத்து எந்த பொருளிலும் உயிரை இறக்க முடியுமா? அதாவது திட திரவ வாயு எல்லாம் பொருள்தானே? முடியும் என்பதே விடை.

இப்போது நாம் அனைவரும் அறிந்த எடுத்துக்காட்டின் மூலம் உணர முயல்வோம்.

மின்சார ஆற்றலை பிடித்து சேமிக்க முயல்வோம்.
காற்றில் பிடிக்க முயன்றால் மின்னலாக அல்லது எலக்ட்ரிக் ஸ்பார்க்காக தோன்றி மறையும் ஆனால் நிலைத்திருக்காது.
தண்ணீர் கிட்டத்தட்ட மின்சாரத்தை பயன்படுத்த முடியாத ஒரு ஊடகமே.
பின் கல் மண் என்று தேர்ந்தெடுத்தால் அவை மின்சாரத்தைக் கடத்துவது கூட இல்லை.

அதனால் மின்கலம் என்ற பேட்டரியை திட திரவங்களைக் கொண்டு வேதி வினையாக சேகரித்து பயன்படுத்துகிறோம்.

இப்போது இறந்த ஆற்றலாகிய ( ஆன்மா ஆற்றல் மட்டும் அல்ல. அறிவு அதாவது consciousness உள்ளது. மின்சாரம் உணர்வற்ற ஆற்றல். இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டது. அவ்வளவே.) ஆன்மாவை வழிபட எந்த ஊடகத்தில் இறக்கி வழிபடலாம்.
ஏதோ ஒரு திடப்பொருள்.

அந்த திடப் பொருள்தான் தர்பைப் புல். ( பல சோதனைகளைச் செய்ய பல ஆண்டுகளாக எண்ணம். நேரமும் நிதியும் தேவை).

அடுத்தது மின்சாரத்தை ” ஏ மின்சாரமே! இந்த மின்கலத்தில் வந்து இறங்கு என்று கேட்க முடியாது! “. கேட்டால் நம்மை விட முட்டாள் யாரும் இருக்க முடியாது.

ஆனால் ஆன்மாவை எப்படி தர்பைப்புல்லில் இறக்க முடியும்?

The ouija (/ˈwiːdʒə/ WEE-jə, /-dʒi/ jee) வீஜ என்ற ஆவிகளுடன் பேசும் பலகை அனைவரும் அறிந்ததே. (ஆவிகளோடு என் தாயும் அவரது தோழிகளும் பேசியதை சிறுவயதில் நான் நேரில் கண்டிருக்கிறேன்.)

அந்த வீஜ போர்டில் மின்சாரத்தை இறக்க முடியாது. ஆனால் ஆவிகள் நம் கோரிக்கையை ஏற்று இறங்கி காயை நகர்த்தி நமக்கு பதில் தருகின்றன.

அதைப்போல சரியான அளவில் சில தர்ப்பைப் புற்களைக் கட்டி சரியான இடத்தில் முடிச்சுப் போட்டு கூர்ச்சம் அல்லது புக்னம் என்ற ஊடகம் தயாரிக்கப்பட்டு தர்ப்பைப் புல்லைப் பரப்பி கூர்ச்சங்கள் ( தந்தை வழி மூதாதையர்,தாய் வழி மூதாதையர், திருமண உறவு மூலம் வந்த மூதாதையர்) வடக்கு தெற்காக வைக்கப்பட்டு சில மந்திரங்களைச் சொல்லி எந்த கோத்திரம் எந்த பெயர் என்றும் சொல்லி அழைக்க நம் மூதாதையர் வந்து இறங்குகிறார்கள்.

வீஜ போர்டில் “ஏதேனும் ஒரு ஆவி இங்கு இருக்கிறீர்களா?! இருந்தால் பேச விரும்புகிறீர்களா?!” என்று கேட்கிறோம்.
பின் ஏதேனும் ஒரு ஆவி வந்ததும் அதன் பெயரை முதல் கேள்வியாகக் கேட்கிறோம்.

ஆனால் தர்ப்பணத்தின் போது குறிப்பிட்ட ஆன்மாக்களை அதாவது நம் மூதாதையர்களை மட்டும் வரவழைப்பதே மந்திரங்களின் ஆற்றல். ( இடக்காக பல கேள்விகள் இங்கே கேட்கலாம். தர்பைப்புல்லில் ஆன்மா இறங்கியது என்று என்ன நிச்சயம்? இறந்த என் மூதாதையரை சோதிக்கும் மன நிலை எனக்கு இல்லை. யாரேனும் செய்து பதிந்தால் நிச்சயமாக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்).

மெதுவாக எள் தண்ணீர் பற்றியும் அறிய முயல்வோம்
(தொடரும்)
#தர்ப்பணம்மூடப்பழக்கமா

தந்தைவழி தாய்வழி மூதாதையர்கள் தர்ப்பணம்

ஆண் மூதாதையர் மற்றும் பெண் மூதாதையருக்கும் சரிசமமாக தர்ப்பணம் செய்யப்படுகிறது.
1. தந்தை,அவரது தந்தை,தந்தையின் தாத்தா
2.(தாய் இருந்தால்) தந்தையின் தாய்,தந்தையின் பாட்டி,தந்தையின் பாட்டியின் தாய்
3. தாயின் தாய் தந்தையர்,தாயின் தாத்தா பாட்டி, தாயின் தாத்தா பாட்டியின் தந்தை தாய்
என்று இருவழிகளிலும் உள்ள ஆண் பெண் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் தரப்படுகிறது.

மேலும் இரண்டு வழிகளிலும் நாம் அறிந்தும் அறியாத மூதாதையர்களுக்கும் தர்ப்பணம் தரப்படுகிறது.

மேலும் அநாதைகளாக இறந்தவர்கள் யாராக இருந்தாலும்( சாதி மத இன குல வேறுபாடின்றி) அவர்களுக்கும் தர்ப்பணம் செய்யப்படுகிறது.

எடுத்துக்காட்டாக நீங்கள் தர்ப்பணம் செய்யும் இடத்தில் பலரும் அறியாமல் நிம்மதி அடையாத ஆன்மாக்களுக்கும் இருக்கலாம். அவற்றிற்கும் தர்ப்பணம் செய்யப்படுகிறது. இதனால் பலருக்கும் ஏற்படும் ஆவிகள் சம்பந்தமான சிக்கல்கள் நீங்குகின்றன.

இது மஹாலயம் தவிர்த்து 80 தர்ப்பணங்களில் கடைப்பிடிக்கும் முறை.

மேலும் சிறப்பான வருடத்தில் 16 நாட்களான மஹாலய பட்சத்தில் ( மஹாலயம் – அனைத்து மூதாதையரும் நம் வீடு வந்து சேரும் நாள் பக்ஷம்- பதினைந்து நாள்) மேற்சொன்ன அனைவருக்கும் மற்றும் மற்ற இரத்த உறவுகள் மற்றும் சம்பந்தம் செய்த குடும்ப உறவுகள் நண்பர்கள் ஆசிரியர் நம் வாழ்வில் ஒளியேற்றியவர்கள்,….. மற்றும் நாம் அறிந்தும் அறியாத உறவுகள் உறவுகள் அற்ற அநாதைகள் போன்றோருக்கு தர்ப்பணம் செய்யப்படுகிறது.

தர்ப்பணம் எத்தனை ஆண்டுகளுக்கு?!

நமது தந்தை இறந்து 0 முதல் 50 ஆண்டுகள் இருக்கலாம்.
அவரது தந்தை இறந்து 100 முதல் 150 ஆண்டுகள் இருக்கலாம்.
அவரது தந்தை இறந்து 150 முதல் 200 ஆண்டு இருக்கலாம்.
கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு தாத்தாவின் அப்பா பெயர் நாம் இறந்ததும் நீக்கப்பட்டு நம் பெயர் சேர்க்கப்பட்டு மகனோ மகளோ மனைவியோ… தர்ப்பணம் செய்கிறார்கள்.

இப்படி சங்கிலித் தொடர் போல செல்கிறது.

” இந்துக்கள் இறந்த பின்னும் தாய் தந்தைக்கு எள்ளும் தண்ணீரும் தருகிறார்கள். என் மகன் உயிருடன் இருக்கும்போதே தண்ணீரை நிறுத்திவிட்டான்!” ஷாஜஹான் தன்னை கோட்டையில் சிறைப் பிடித்து தண்ணீர் இணைப்பையும் துண்டித்த போது எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டது.

தர்ப்பணமும் பிரிந்த ஆத்மாக்களும்

நம்மை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் பல விதங்களில் உடலை துறக்கின்றன.பிறக்கும் போதே,இளவயதில்,நடுவயதில், நோய்வாய்ப் பட்டு,கொலை செய்யப்பட்டு,கொடுமைப்படுத்தப்பட்டு,விபத்தில்,… இப்படி பல வகைகளில்.
இப்படி பல நாட்கள் ஆண்டுகள் பராமரித்த மற்றும் பல புலன் நுகர்வுகளை உணரக் காரணமான இந்த உடலை விட்டுவிட்டோம் என்ற எண்ணமோ புரிதலோ ஆன்மாவிற்கு இருக்காது.

அதன் நிலையை அறிவுறுத்துவதே பதினாறு நாள் சடங்கு. அதுவரை ஆன்மா ஒரு குழப்ப நிலையிலேயே இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில் பதினாறு நாள் சடங்குகள் செய்பவர்கள் குறைந்து வருகிறார்கள். பல குறுக்கு வழிகள் கையாள்கிறார்கள். சுருக்கமாக ஓரிருநாள் செய்தால் போதும் . விடுமுறை இல்லை என்ற நியாயமான சிக்கல்கள்.

ஆனால் இறந்தோர் நிலை மாறப்போவதில்லை. குழம்பிய நிலையிலேயே ஆன்மாக்கள் திரிகின்றன.

ஒருமுறை காஞ்சிப் பெரியவர் ” ரொம்ப இரைச்சல் அதிகமா இருக்கு! ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும்!” என்றார். உடனிருந்தவர்களுக்குப் புரியும்படியாக ” இறந்து போனவாளுக்கு யாரும் சரியா ஈமக்ரியை பதினாறு நாள் சடங்கைச் செய்யறதில்லை. அந்த ஆத்மாக்கள் நிறைய என்னைத் தேடிவந்து அழறது. இது அதிகமான இரைச்சலா இருக்கு. அதனால எல்லாரும் ஈழக் கிரியை பண்ண வசதி செஞ்சா இந்த ஆன்மாக்கள் சாந்தி ஆகும்.”

மகாப் பெரியவரின் இந்த சிந்தனையில் உருவானதே இன்றைய ஞான வாபி என்ற ஈமச்சடங்குகள் நடத்தும் கூடங்கள்.

இன்னொரு ஆவிகள் உலக நிகழ்ச்சியில் ஆவிகள் உலகுடன் தொடர்பு கொண்டு பல ப்ரச்சனைகளைத் தீர்த்து வரும் நிபுணர் ” நல்ல முறைப்படி வாழும் அந்தணர்களை ஆவிகள் தொந்தரவு செய்வதில்லை! ஆனால் ஏனென்று காரணம் தெரியவில்லை!” என்று சொன்னார்.

அதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. ஆவிக்கு சாதி வித்தியாசம் தெரியுமா என்றால் காரணம் அது இல்லை.

வருடத்தில் 96 முறை தன் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது வேத நெறி. இதை சில பல அந்தணர்கள் இன்றும் செய்கிறார்கள். அவ்வாறு செய்யும்போது அநாதையாக தாய் தந்தை உடன் பிறப்பு என்று யாருமே இல்லாத ஆன்மாக்களுக்கும் எள்ளும் தண்ணீரும் தரப்படுகிறது. அதாவது தர்ப்பணம் செய்யும் அந்தணரைச் சுற்றி உள்ள அனைத்து ஆன்மாக்களுக்கும் செய்யப்படுகிறது. அதனால் அந்த ஆன்மாக்கள் அவர்களோடு நட்பாகவும் நன்றியோடும் நடந்து கொள்கின்றன.

இது அந்தணர்களின் கடமை. அதை இன்றும் செய்து வருகிறார்கள்.
மஹாலயம் 16 நாட்கள்
மாதப் பிறப்பு 12 நாட்கள்
அமாவாசை
சூரிய கிரகணம்
சந்திர கிரகணம்
…….
இப்படி 96 முறை செய்வது வழக்கம்.

இதன் சிறப்பை உணர்ந்ததும் நான் கிட்டத்தட்ட 48 முறையாவது செய்து என்னால் முடிந்த பங்களிக்கிறேன்.

ஒரு காலத்தில் அனைவரும் செய்து வந்த தர்ப்பணங்கள் இன்று அந்தணர்களோடு ஓரளவில் வந்து நிற்கிறது.

குறைந்தது மஹாலய பட்சம் என்ற 16 நாட்களை நம் வாழ்வின் வெற்றிக்குக் காரணமாக இருந்த நம் மூதாதையர்களை நன்றியோடு நினைவு கூர்ந்து தவிர்க்கப்படக் கூடிய புலனின்பங்களான மாமிசம்,இறைச்சி,திருமணம்,கேளிக்கைகள்…. போன்றவற்றைத் தவிர்த்து நன்றி சொல்வோம்!

வார்த்தையின்றி போகும்போது மௌனத்தாலே நன்றி சொல்வோம்!

அனைவருக்கும் அவரவர் மூதாதையரின் வாழ்த்துக்களும் அருளும் கிடைக்கட்டும்!

வாழ்க வள நல மனித நேயத்துடன்!

இறைநிலை ஏன் கடினமானது?

இறைவழி பயிற்சிகள் அனைத்தையும் சேர்த்தே கொஞ்சம் கொஞ்சமாக பழக வேண்டும். மிகக் கடினம். ஆனால் முடியும்.

நம் பழைய கர்ம வினைகள் இவற்றைச் செய்ய விடாது. எடுத்துக்காட்டாக 5 மணிக்கு எழும் நான் இன்று 6:30 க்கு எழுந்தேன். ஒரு நாள் இறைவழிபாடு வீணானது!பேசா( இறைவனை வழிபடாத) நாளெல்லாம் பிறவா நாளே என்பர்.

இறைவா! என்னைக் கர்மவினைகள் உன்னை நினைக்க விடுவதில்லை. உன் சிந்தனைகள் என் மனதை நிரப்ப அருள் செய் என்று வேண்ட வேண்டும். மேலும் மேலும் பல சோதனைகள் வரும். பலமுறை தோல்வியே ஏற்படும்.

நாளடைவில் அவனருள் நம் வாழ்வை நடத்தும்.இன்ப துன்பம் வரும். நம் மனம் அதை அப்படியே ஏற்கும் பக்குவத்தை அடையும்.

நம்மை இவ்வாறு நன்னிலை அடைய விடாமல் செய்வது சாதி,மதம்,இனம்,குலம்,மொழி,பால்,நாடு,ஊர்,படிப்பு,பதவி,பட்டம்,பவிசு,…… என்ற உடல் சார்ந்த அழியும் வித்தியாசங்களே.

இவற்றைக் கடந்து சிந்திப்பவர் லட்சத்தில் ஒருவரே.

முயல்பவர் கோடியில் ஒருவர்.

இறைநிலை உணர்பவர் பத்துக் கோடியில் ஒருவரே.

இந்தியா முழுவதும் தேடினால் ஜீவன் முக்தர்கள் ஒரு நூறு இருநூறு பேர் தேறுவார்கள்.
#இறைநிலைஏன்கடினமானது

கண்ணாமூச்சி

என்று நம் மனம் உள் நோக்கி பயணிக்கின்றதோ அன்று இறைவன் நம்முடன் பேசத் தொடங்குகிறான். அவனது கை வண்ணத்தை அன்றாட நிகழ்வுகளில் காண முடியும். எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற எண்ணம் பிறக்கும்.

மனிதனின் உடல் சார்ந்த வேறுபாடுகள் (சாதி மதம் இனம் குலம் பால் திணை மொழி) என்பவை நாம் கடவுள் என்பதை உணரவிடாமல் செய்யத் தோன்றிய மாயை விளையாட்டே!

Hide and seek.அதாவது கண்ணாமூச்சி. பரம்பொருள் இந்த மாமிசத்தால் கட்டமைக்கப்பட்ட உடலில் ஒளிந்து கொண்டு எங்கே என்னைக் கண்டுபிடி என்று மாயையால்(உடல் சார்ந்த வேறுபாடுகளால்) கண்ணைக் கட்டி விடுகிறான்.

நாம் சாதி மத இன மொழி நாடு பால் திணை என்ற பொருட்களில் தடுக்கி விழுகிறோம். இதை உணர்ந்தவர்கள் கண்ணைக் கட்டிக் கொண்டாலும் இந்த இடிபாடுகளில் இடர்வதில்லை.

சொந்த முயற்சியாலும் இறையருளாலும் கண்ணில் கட்டப்பட்ட துணியைத் தாண்டி பார்க்கும் விவேகம் உருவாகிறது.

அதற்குப் பின் உலகே விளையாட்டாகத் தோன்றும். மகான்களின் நிலை இதுவே! எச்சிலையும் சொரிநாயும் விருந்தும் பசுவும்….. எல்லாம் ஒன்றே என்ற நிலை.

பேய் போல் திரிந்து,
பிணம் போல் கிடந்து,
இட்ட பிச்சையெல்லாம் நாய் போல் அருந்தி,
நரி போல் உழன்று,
நன் மங்கையரைத் தாய் போல் கருதித்,
தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி
சேய் போல் இருப்பர் கண்டீர்!
உண்மை ஞானம் தெளிந்தவரே!

– பட்டினத்தார்
#கண்ணாமூச்சி

போலி குருக்கள் நமக்கு அமைவதேன்?

நம் மனத்தின் தூய்மைக்குத் தகுந்த குருவே நமக்குத் தோன்றுவார். மக்கள் தின வழிபாடுகள் ஏதோ கீழானது. பெரிய மந்த்ரோபதேசம் தேவை என்று தவறாகப் புரிந்து கொண்டு குருக்களைத் தேடிப் போகிறார்கள்.

மேலும் உலக இன்பதுன்பங்களில் உதவி பெறவே குருக்களைத் தேடுகிறார்கள். தினமும் செய்யும் மூவேளை வழிபாடுகளால் நம் மனது தூய்மையாக தூய்மையாக சத்குரு நமக்குத் தோன்றுவார்.

பால்காரர் வரும் முன் நாம் செய்ய வேண்டியது பால்வாங்கும் பாத்திரத்தை நன்றாக கழுவித் தேய்த்து உலர்த்தி வைக்க வேண்டும். அதுவே தின வழிபாடும் நல்லொழுக்கமும் நற்சிந்தனையும் தரும் பலன்.

பாத்திரம் கழுவி இருந்தால் பால்காரர் தேடி வந்து பால் ஊற்றுவார். அவரே குரு.

நாமோ பால் பாத்திரத்தைத் தேய்க்காமல் தெருத்தெருவாய் பால்காரரைத் தேடி அலைகிறோம். பாலும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் பால் திரிந்துவிடுகிறது.

அதாவது அன்றாட வாழ்விற்கான வேண்டுதல்களையே குருவிடம் வைக்கிறோம். காலப்போக்கில் அப்படிப்பெற்ற அனைத்தும் அழிந்து போகிறது.

குறை நம்மிடமே இருக்கிறது!

#போலிகுருக்கள்நமக்குஅமைவதேன்