நம்மை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் பல விதங்களில் உடலை துறக்கின்றன.பிறக்கும் போதே,இளவயதில்,நடுவயதில், நோய்வாய்ப் பட்டு,கொலை செய்யப்பட்டு,கொடுமைப்படுத்தப்பட்டு,விபத்தில்,… இப்படி பல வகைகளில்.
இப்படி பல நாட்கள் ஆண்டுகள் பராமரித்த மற்றும் பல புலன் நுகர்வுகளை உணரக் காரணமான இந்த உடலை விட்டுவிட்டோம் என்ற எண்ணமோ புரிதலோ ஆன்மாவிற்கு இருக்காது.
அதன் நிலையை அறிவுறுத்துவதே பதினாறு நாள் சடங்கு. அதுவரை ஆன்மா ஒரு குழப்ப நிலையிலேயே இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் பதினாறு நாள் சடங்குகள் செய்பவர்கள் குறைந்து வருகிறார்கள். பல குறுக்கு வழிகள் கையாள்கிறார்கள். சுருக்கமாக ஓரிருநாள் செய்தால் போதும் . விடுமுறை இல்லை என்ற நியாயமான சிக்கல்கள்.
ஆனால் இறந்தோர் நிலை மாறப்போவதில்லை. குழம்பிய நிலையிலேயே ஆன்மாக்கள் திரிகின்றன.
ஒருமுறை காஞ்சிப் பெரியவர் ” ரொம்ப இரைச்சல் அதிகமா இருக்கு! ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும்!” என்றார். உடனிருந்தவர்களுக்குப் புரியும்படியாக ” இறந்து போனவாளுக்கு யாரும் சரியா ஈமக்ரியை பதினாறு நாள் சடங்கைச் செய்யறதில்லை. அந்த ஆத்மாக்கள் நிறைய என்னைத் தேடிவந்து அழறது. இது அதிகமான இரைச்சலா இருக்கு. அதனால எல்லாரும் ஈழக் கிரியை பண்ண வசதி செஞ்சா இந்த ஆன்மாக்கள் சாந்தி ஆகும்.”
மகாப் பெரியவரின் இந்த சிந்தனையில் உருவானதே இன்றைய ஞான வாபி என்ற ஈமச்சடங்குகள் நடத்தும் கூடங்கள்.
இன்னொரு ஆவிகள் உலக நிகழ்ச்சியில் ஆவிகள் உலகுடன் தொடர்பு கொண்டு பல ப்ரச்சனைகளைத் தீர்த்து வரும் நிபுணர் ” நல்ல முறைப்படி வாழும் அந்தணர்களை ஆவிகள் தொந்தரவு செய்வதில்லை! ஆனால் ஏனென்று காரணம் தெரியவில்லை!” என்று சொன்னார்.
அதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. ஆவிக்கு சாதி வித்தியாசம் தெரியுமா என்றால் காரணம் அது இல்லை.
வருடத்தில் 96 முறை தன் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது வேத நெறி. இதை சில பல அந்தணர்கள் இன்றும் செய்கிறார்கள். அவ்வாறு செய்யும்போது அநாதையாக தாய் தந்தை உடன் பிறப்பு என்று யாருமே இல்லாத ஆன்மாக்களுக்கும் எள்ளும் தண்ணீரும் தரப்படுகிறது. அதாவது தர்ப்பணம் செய்யும் அந்தணரைச் சுற்றி உள்ள அனைத்து ஆன்மாக்களுக்கும் செய்யப்படுகிறது. அதனால் அந்த ஆன்மாக்கள் அவர்களோடு நட்பாகவும் நன்றியோடும் நடந்து கொள்கின்றன.
இது அந்தணர்களின் கடமை. அதை இன்றும் செய்து வருகிறார்கள்.
மஹாலயம் 16 நாட்கள்
மாதப் பிறப்பு 12 நாட்கள்
அமாவாசை
சூரிய கிரகணம்
சந்திர கிரகணம்
…….
இப்படி 96 முறை செய்வது வழக்கம்.
இதன் சிறப்பை உணர்ந்ததும் நான் கிட்டத்தட்ட 48 முறையாவது செய்து என்னால் முடிந்த பங்களிக்கிறேன்.
ஒரு காலத்தில் அனைவரும் செய்து வந்த தர்ப்பணங்கள் இன்று அந்தணர்களோடு ஓரளவில் வந்து நிற்கிறது.
குறைந்தது மஹாலய பட்சம் என்ற 16 நாட்களை நம் வாழ்வின் வெற்றிக்குக் காரணமாக இருந்த நம் மூதாதையர்களை நன்றியோடு நினைவு கூர்ந்து தவிர்க்கப்படக் கூடிய புலனின்பங்களான மாமிசம்,இறைச்சி,திருமணம்,கேளிக்கைகள்…. போன்றவற்றைத் தவிர்த்து நன்றி சொல்வோம்!
வார்த்தையின்றி போகும்போது மௌனத்தாலே நன்றி சொல்வோம்!
அனைவருக்கும் அவரவர் மூதாதையரின் வாழ்த்துக்களும் அருளும் கிடைக்கட்டும்!
வாழ்க வள நல மனித நேயத்துடன்!