வாழ்க்கை ஏன்?
===============
இல்லறத்தின் வழியே இறைநிலையை உணர முதலில் “நமக்கு ஏன் உடலெடுத்து அதில் உயிர் தொடுத்து பின் அதை விட்டுச் செல்லும் இந்த வாழ்க்கை ஏன்? ” என்ற கேள்விக்கு விடை வேண்டும். அதற்குப்பின் இல்லறம் ஏன் தேவை என்பதையும் எப்படி வாழ்ந்தால் இறையுணர்வில் நிலைக்கலாம் என்றும் அறிவோம்.
எல்லா மதங்களும் பாவ புண்ணியங்கள் பற்றிப் பலவாறாகச் சொல்கின்றன. சொர்க்க நரகங்களைப் பற்றியும் சொல்கின்றன. இவ்விரண்டையும் இணைத்துப் பார்த்தால் உண்மை விளங்கும். எல்லா வல்லமை படைத்த இறைவன் நினத்தால் நம் பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு பாதிப் பேரை சொர்க்கத்திற்கும் மீதிப் பேரை நரகத்திற்கும் அனுப்பலாமே! பின் அவர்களை நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் முறை வைத்து முன்னும் பின்னும் அனுப்பி அவர்களைத் தூய்மைப் படுத்தலாமே! இந்த உலகெதற்கு?! இந்த பூமி எதற்கு?! இந்த வாழ்வெதற்கு?! இந்த இன்ப துன்பமெதற்கு?! இந்த சாவெதற்கு?!
இறைவன் தாயைப் போல மிகப் பெரிய கருணையுடையவன்! “பாவ புண்ணியங்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆனால் அவர்கள் அனைவரும் என் குழந்தைகள்! அவர்களின் பாவங்கள் துன்பமான நிகழ்வையும் நற்செயல்கள் இன்பமான நிகழ்வையும் தரும் என்பது நான் வகுத்த விதி! இந்தப் பாவ புண்ணியங்களை வைத்து ஒரு விளையாட்டுப் போல் செய்தால் அதை எளிதாகப் புரிந்து முன்னேறும் வாய்ப்பும் உண்டாகும்!” என்று இந்த உலகையும்,உடல்,உயிர் மனதின் சேர்க்கையையும் படைத்தான். மேலும் சுயமுயற்சி( free will) என்னும் கருவியையும் கொடுத்து பாவ புண்ணிய மூட்டைகளால் ஏற்றத்தாழ்வுகளையும், பாவ புண்ணிய மூட்டைகளை எரிக்கும் விவேகத்தையும் ,அறியாமையை விரைவில் ஒழிக்க மனித நேயத்தையும் படைத்தான்! இவற்றில் தோல்வி அடைந்தால் மறுபடியும் பிறக்கும் வாய்ப்பும் தன் தவறுகளைத் திருத்தி இறைவனும் நாமும் ஒன்றே என்ற நிலையை உணரும் பாதையில் நம்மை ஒவ்வொரு நொடியும் ஆற்றுப் படுத்திக் கொண்டும் இருக்கிறான்! வாழ்க்கை ஒரு விளையாட்டே! விளையாட முடியும்! ஆனால் அனுபவத்தையும் விவேகத்தையும் தவிர எதையும் கொண்டு போகமுடியாது! (தொடரும்)