இல்லறத்தின் வழியே இறைநிலை-3

வாழ்க்கை ஏன்?

===============

இல்லறத்தின் வழியே இறைநிலையை உணர முதலில் “நமக்கு ஏன் உடலெடுத்து அதில் உயிர் தொடுத்து பின் அதை விட்டுச் செல்லும் இந்த வாழ்க்கை ஏன்? ” என்ற கேள்விக்கு விடை வேண்டும். அதற்குப்பின் இல்லறம் ஏன் தேவை என்பதையும் எப்படி வாழ்ந்தால் இறையுணர்வில் நிலைக்கலாம் என்றும் அறிவோம்.

எல்லா மதங்களும் பாவ புண்ணியங்கள் பற்றிப் பலவாறாகச் சொல்கின்றன. சொர்க்க நரகங்களைப் பற்றியும் சொல்கின்றன. இவ்விரண்டையும் இணைத்துப் பார்த்தால் உண்மை விளங்கும். எல்லா வல்லமை படைத்த இறைவன் நினத்தால் நம் பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு பாதிப் பேரை சொர்க்கத்திற்கும் மீதிப் பேரை நரகத்திற்கும் அனுப்பலாமே! பின் அவர்களை நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் முறை வைத்து முன்னும் பின்னும் அனுப்பி அவர்களைத் தூய்மைப் படுத்தலாமே! இந்த உலகெதற்கு?!  இந்த பூமி எதற்கு?! இந்த வாழ்வெதற்கு?! இந்த இன்ப துன்பமெதற்கு?! இந்த சாவெதற்கு?!

இறைவன் தாயைப் போல மிகப் பெரிய கருணையுடையவன்!  “பாவ புண்ணியங்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆனால் அவர்கள் அனைவரும் என் குழந்தைகள்! அவர்களின் பாவங்கள் துன்பமான நிகழ்வையும் நற்செயல்கள் இன்பமான நிகழ்வையும் தரும் என்பது நான் வகுத்த விதி! இந்தப் பாவ புண்ணியங்களை வைத்து ஒரு விளையாட்டுப் போல் செய்தால் அதை எளிதாகப் புரிந்து முன்னேறும் வாய்ப்பும் உண்டாகும்!” என்று இந்த உலகையும்,உடல்,உயிர் மனதின் சேர்க்கையையும் படைத்தான். மேலும் சுயமுயற்சி( free will)  என்னும் கருவியையும் கொடுத்து பாவ புண்ணிய மூட்டைகளால் ஏற்றத்தாழ்வுகளையும், பாவ புண்ணிய மூட்டைகளை எரிக்கும் விவேகத்தையும் ,அறியாமையை விரைவில் ஒழிக்க மனித நேயத்தையும் படைத்தான்!  இவற்றில் தோல்வி அடைந்தால் மறுபடியும் பிறக்கும் வாய்ப்பும் தன் தவறுகளைத் திருத்தி இறைவனும் நாமும் ஒன்றே என்ற நிலையை உணரும் பாதையில் நம்மை ஒவ்வொரு நொடியும் ஆற்றுப் படுத்திக் கொண்டும் இருக்கிறான்!  வாழ்க்கை ஒரு விளையாட்டே!  விளையாட முடியும்! ஆனால் அனுபவத்தையும் விவேகத்தையும் தவிர எதையும் கொண்டு போகமுடியாது! (தொடரும்)

இல்லறத்தின் வழியே இறை நிலை! -2

புலனடக்கம் , புலன் மயக்கம் மற்றும் புலன் நுகர்ச்சி

இல்லறம் என்றதும் உடனே அனைவர் கவனத்திற்கும் வருவது புலன் நுகர்ச்சி! அதனால் அதை முதலில் புரிந்து கொள்வது முறையே! நாம் புலனடக்கத்தையும், புலன் நுகர்ச்சியையும் மற்றும் புலன் மயக்கத்தையும் பிரித்து அறிய வேண்டும். 
புலன்கள் உள்ளவரை புலன் நுகர்வு தவிர்க்க முடியாது.ஆனால் புலன்கள் வழி மனது செல்லும்போது அதன் குவியத்தை இழக்கிறது. சலனத்தை அடைகிறது.உடனே , “எதற்காக மனம் குவிய வேண்டும்? ஏன் சலனம் கூடாது?” என்ற கேள்விகள் எழுகின்றன. நாம் ஓரளவு மேலெழுந்தவாரியான விளக்கத்தைப் புரிந்து கொள்வோம். (உண்மையான பதிலை உணர மனம்,சித்தம்,புத்தி,அஹம்காரம்,ப்ராணா(மூச்சு அல்ல; நுண் வளி எனலாம்) இவற்றினிடையே உள்ள தொடர்பை உணர வேண்டும். அது கொஞ்சம் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அதனால் அதை பின்னர் பார்ப்போம்). நம் ஆத்மாவை ஒரு தங்கத்தட்டு என உருவகப் படுத்தி மனதை ஒரு தெள்ளிய நீர் நிறைந்த ஏரி (மானசரோவர் ஏரி – கண்ணாடி போல் இருக்குமாம். கைலாஷ் யாத்திரை போனவர்கள் சொல்வார்கள்.) என்று கொள்வோம். தங்கத்தட்டு ஏரியில் விழுந்தால் அழகாகத் தெரியும். ஆனால் ஏரியில் அலைகள் இருந்தால் உள்ளே உள்ள தங்கத்தட்டு தெரியாது. ஏரியில் உண்டாகும் அலைகளே நம் புலன்களின் மூலம் உண்டாகும் மாறுபாடுகள் அல்லது வ்ருத்திகள்(வட மொழியில்). புலன்கள் sensor கள் போல. அவை மின்னலைகளை நரம்பு மண்டலம் மூலமாக மூளைவழியாக மனதுக்கு எடுத்துச் செல்லும் அறிவாற்றல் அற்ற கருவிகளே! (just unintelligent sensing devices). இந்த அதிர்வுகள் நம் விருப்பு வெறுப்பிற்குத் தக்க அலைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கும். இதைத்தான் பதஞ்சலி மகரிஷி “யோகம் சித்த(மன) அலைகளை நிறுத்துவதாகும்; யோகச்சித்த வ்ருத்தி நிரோதஹ!” என்கிறார்! புலன்கள் திறந்திருந்தால் மின்னலைகள் மனதை அடைந்தவண்ணம் இருக்கும். மனமும் சலனம் அடைந்து கொண்டே இருக்கும்! தங்கத்தட்டான ஆத்மா உள்ளிருப்பது தெரியாது! “ஆத்மாவாமுல்ல ஆத்மா! ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல! “ என்று மார்தட்டச் சொல்லும். இப்போது சொல்லுங்கள்! புலனடக்கம் தேவையா,புலனுகர்வு தவறா மற்றும் புலன் மயக்கம் (24 மணி நேரமும் புலன் நுகர்வது புலன் மயக்கம் எனப்படும்) நன்றா? (தொடரும்)

இல்லறத்தின் வழியே இறை நிலை! -1

சில நண்பர்கள் உலகியல் அல்லது லௌகீகம் அல்லது இல்லறத்தின் மூலம் இறைநிலை அடைந்ததாகக் கேள்விப்படுகிறோமே அது சாத்தியமா என்று கேட்டார்கள். அதற்குப் பதில் போல் இப்பதிவு.

“இல்லறம் என்பது ஏதோ ஒரு கீழ்த்தரமான ஒன்று! துறவே சிறந்தது!” என்ற எண்ணம் தவறு . நமது இந்தியப் பண்பாட்டிலே மற்றும் இந்து மதத்திலே தர்ம,அர்த்த,காம மற்றும் மோக்ஷ நிலைகள் கூறப்படுகின்றன. அதனால் தான் திருக்குறளும் அறம்,பொருள்,இன்பம் மற்றும் வீடு என்ற அமைப்பைக் கொண்டுள்ளது. அதாவது அறம்,பொருள்,இன்பம் என்ற படிகளைத் தாண்டித்தான் வீடு பேறு! ஒரே தாண்டாக தாண்டியவர் எவரும் இல்லை! அப்படித் தாண்டியது போல் தோன்றினாலும் அது தோற்றமே உண்மையில்லை! ஏனென்றால் இருவிதமானோரே அவ்வாறு செய்திட முடியும். ஒன்று அவதாரங்கள் ,தானே விரும்பி உலகம் உய்ய மனித உருவில் வருவோர். இரண்டாவது பலப்பல பிறவியில் படிபடியாய் முன்னேறி உலகின் நிலையாமையை உணர்ந்து கொண்டவர்கள்!அவர்கள் இள வயதிலிருந்தே ஞானக் கொழுந்தாய்த் திகழ்வார்கள்! கண்ணன், இராமன், நபிகள் நாயகம் ,இயேசு பிரான் , புத்தர் ,ஆதி சங்கரர்,மஹாவீரர்,ஞான சம்பந்தர்,வள்ளலார்,இரமணர்,இராமக் கிருஷ்ண பரம ஹம்சர் மற்றும் பலப்பல ஏனைய மதங்களிலும் (என் சிற்றறிவுக்கு சட்டென்று நினைவில் வரவில்லை!) வாழ்ந்த மற்றும் வாழும் பெரியோரை எடுத்துக்காட்டாய் நாம் காணலாம்! மற்றவர்கள் எல்லோரும் படிப்படியாகத்தான் முன்னேற வேண்டும். அதற்கு உருவாக்கப் பட்ட வழியே இல்லறம். திரைப் பாடல் – கணவனின் துணையோடுதானே காமனை வென்றாக வேண்டும்! ; இது இரு பாலார்க்கும் பொருந்தும். அதனால் தான் போலிச்சாமியார்கள் சந்தி சிரிக்க நிற்கிறார்கள்!(தொடர்வோம்) 
பி.கு. வள்ளுவர் வீட்டைப் பற்றியும் எழுதியிருப்பார் என்பது என் யூகம்!

மதமும் குழந்தைகளும்

  நாம் பின்பற்றும் மதத்தை நம் குழந்தைகளும் பின் பற்றுகின்றனவே! அது சரியா? தவறா?

நானே இறைவனைக் கண்டதில்லை அப்படி இருக்க அவர்களைப் பின்பற்றச் செய்கிறோமே என்ற கேள்வி எழலாம். சில குழந்தைகள் கடனே என்று பின்பற்றலாம். பின் பற்றாமலும் போகலாம். 
நான் எனக்குச் சொல்லுவது “
1.என் குடும்பத்தில் பிறந்தது அவர்களின் மற்றும் இறைவனின் தேர்வு!
2.எத்தனையோ பிறவி எடுத்த நாம் எந்த எந்த மதங்களையெல்லாம் பின்பற்றினோமோ?
3.எல்லா மதங்களும் சொல்வது மனித நேயம்,தவறான செயல் தவிர்த்தல்,வாழ்வின் நிலையாமை போன்ற பொதுக் கருத்துக்களே”.

என் மகள் ” கடவுள் உண்டா? நீங்கள் கண் மூடி மூச்சடக்கி என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

நான்” 
1.நம்மை மீறிய சக்தி ஒன்று இருப்பதை நாம் எளிதாக அறியலாம். அதற்கு நாம் நம் வாழ்வின் நிகழ்வுகளை உற்று நோக்கினால் போதும்.
2.மனமடங்கினால் அச்சக்தியை உணரலாம் என்று எல்லா மதங்களும் நேராகவோ மறைமுகமாகவோ சொல்கின்றன.
3. மனமடங்க பயிற்சி தேவை. அதற்கு 
நான்கு வழிகள் உண்டு.

மக்கள் சேவை – கர்ம யோகம். அதாவது எந்த காரியம் நமக்குக் கொடுக்கப் படுகிறதோ அதைச் செவ்வனே செய்தல். அதனால் எல்லா உயிரிடமும் அன்பு ஏற்படும்.

இறைவனைத் தொழுதல் – பக்தி யோகம் 
இறை நூல்கள் வழி நடப்பது. இறைவனின் நற்குணங்களைப் பாடி அவ்வாறே வாழ்தல்
சிந்தித்தல் – ஞான யோகம் 
வாழ்வின்நிகழ்வுகள்,நிலையாமை,மனம்,உடல்,மரணம்,பிறப்பு,தூக்க நிலை …. பற்றி யோசித்துத் தெளிதல்

பயிற்சி – ராச யோகம் 
உடல் பயிற்சி – ஆசனம்,மூச்சைக் கட்டுப் படுத்துவது,உடலைப் பேணுவது,தியானம் .

ஒவ்வொருவரின் மனநிலைக்குத் தகுந்தவாறே நம் மனம் இந்த நான்கில் ஒன்றில் ஈடுபடும். இவற்றில் உயர்வு தாழ்வில்லை! எந்த மதம் என்பதும் பொருட்டில்லை!

இந்த நாலும் நமக்குப் பிடிப்பதும் உண்டு. எது உன் மனத்தைக் கவர்கிறதோ அதைப் பின்பற்று! மற்றவர்கள் வழி தவறு என்று எண்ணுவது உன் அறியாமை. அதில் நேரத்தைத் தவறவிடாதே! 
நான் இறக்கும் முன் அந்நிலை அடைந்தால் நிச்சயம் உனக்கும் சொல்வேன்! இல்லை என்றால் என் பயணம் வரும் பிறப்பில் தொடரும். 
இவையெல்லாம் இவ்வயதில் குழப்பம் தரும். நீ வாழ வாழ தெளிவு பிறக்கும்!

சுருங்கச் சொன்னால் Be good! Do good! நல்லவளாய் இரு! நல்லதைச் செய்! ” 
என்றேன்.
“ஒரு குழந்தைக்கு இப்படி விளக்கமா !?” என்று மனைவியார் கேட்டார்கள். 
” இதைப் போல் எனக்கு சிறுவயதில் விளக்கியிருந்தால் மேலும் நன்றாக அமைதியாக வாழ்ந்திருப்பேன் என்ற எண்ணம் மேலிடுவதால்த் தான்!” என்றேன்!