முக்தி,மோட்சம்,லிபரேஷன்,ரியலைசேஷன்!

(நண்பர் Doss Ry முக்தி என்றால் என்ன என்று கேட்டிருந்தார். என் சிறுமதிக்கு எட்டிய விளக்கம் இதோ. இதை பின்னூட்டமாக எழுதினேன். பின்னூட்டங்கள் 800 சொற்களுக்குக் குறைவாக இருக்க வேண்டுமாம்! மார்க் இன்று எனக்குக் கற்றுக் தந்தது. அதனால் இதைத் தனிப்பதிவாக இங்கே தருகிறேன்!)

முக்தி என்ற நிலை வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒன்று என்று சொல்லப்படுகிறது.

அதை அனுபவித்தே உணரமுடியும் என்றும் அதை அடைந்தவர்களில் கூட தெளிவாக விளக்க இயலாது என்றும் சொல்லப்படுகிறது.

இதன் அடிப்படைக் காரணம் அது மனங்களைக் கடந்த நிலை என்பதால்.

நம் அனுபவம் சிந்தனை எல்லாம் மனம் என்ற கருவியைக் கொண்டே நடக்கிறது.

முக்தி நிலை மனங்களைக் கடந்த நிலை என்பதால் திலிருந்து வரும் சிந்தனைகளாலோ சொல்லாலோ எழுத்தாலோ விவரிக்க இயல்வதில்லை.

அப்படி என்றால் என்னதான் செய்வது? மனம் அழிய பயிற்சி எடுப்பதே ஆன்மீகம்.

நாம் என்று நாம் சொல்லுவது உடல்,மனம்,ஆன்மா என்ற மூன்றின் கோப்பு.

அதாவது மூன்று கூறுகளைக் கட்டும்போது நாம் நான் என்ற எண்ணம் அதாவது ஈகோ என்ற “நான் இருக்கிறேன்” என்ற சிந்தனை உருவாகிறது.

அந்த நான் என்ற அடிப்படைச் சிந்தனையை ஈகோ என்கிறோம். உடலுக்கும் ஆன்மாவிற்கும் இணைப்புப் பாலமாக இருப்பது நான் என்ற சிந்தனை.

அதைச் சுற்றி பின்னப்பட்ட ஆயிரமாயிரம் எண்ணங்களே மனம் என்று நாம் கூறுகிறோம்.

மனம் என்ற இணைப்புப் பாலம் துண்டிக்கப்பட்டால் உடல் வேறாக ஆன்மா வேறாக இருக்கும் நிலையை இந்த உடலிலேயே உணர்வது ஜீவன் முக்தி.

மனம் அழியக் கற்பதே அட்டாங்க யோகம் . அதாவது மனத்தை அழிக்க எட்டு படிகள்.

அந்த ஒவ்வொரு படியிலும் ஏற தன் முயற்சி குருவின்(உண்மை ஜீவன் முக்தர். அந்த இந்த ஆனந்தாக்கள் இல்லை. விவேகானந்தருக்கு பரமஹம்சர் கிடைத்தது போல) வழிகாட்டல் தேவை.

அப்படி பலப்பல பிறவிகளில் முயன்று முக்தி அடைவதற்கு எடுத்துக்காட்டாக ஒரு கதை உபநிடதங்களில் சொல்லப்படுகிறது.

ஒரு உப்புப்பொம்மை கடலின் ஆழம் காணப் புறப்பட்டு கரைந்து போனதாம். நாம் யார் என்று தேடத்தொடங்கி இறுதியில் நாம் என்ற நினைவே மாயை .நாம் தான் எங்கும் நீக்கமற நிலைத்த பரம்பொருள் என்று உணர்தல் இறுதி நிலை. இதுவரை சொன்னது புரிந்து கொள்ளக் கடினமான விளக்கம்.

நிற்க.

எளிதான விளக்கம் காண முயல்வோம்.

முதலில் நாம் கட்டுண்டு இருக்கிறோம் என்பதை உணர்தல்.

எதில் கட்டுண்டு இருக்கிறோம் என்று உணர்தல் அடுத்த நிலை.

கட்டைத் தவிர்க்க வழிகள் உண்டா என்று ஆராய்தல் அடுத்த நிலை.

கட்டை அவிழ்த்தவர்கள் உண்டா என்று தேடிச் சரணடைந்து அவர்கள் வழி நிற்றல் அடுத்த நிலை.

கட்டுக்களை அவிழ்க்க சுய முனைப்போடு செயல்பட்டு விடுபட்டால் இறுதி நிலை.

எடுத்துக்காட்டாக
பூமியில் நாம் கால் பதித்திருக்கும் வரை புவியீர்ப்பு விசை என்ற ஒன்றை உணர்வதில்லை.

அதைப் போல அன்றாட வாழ்வியலான உண்ணல்,உறங்கல்,உடலால் கூடல் என்ற சுழலில் பம்பரம்போல் சுழன்று கொண்டிருக்கும் வரை நாம் ஏன் இந்த சுழற்சிக்கு ஆட்படுகிறோம் என்ற சிந்தனை நம்மில் பலருக்கும் வருவதில்லை.

பூமியை விட்டு வெளியேறும்போதே புவி ஈர்ப்புவிசை என்ற ஒன்றே நம்மைத் தரையில் காலூன்றி நடக்க உதவியது என்பதை உணர்வோம். மேலும் பொருட்கள் மேலிருந்து கீழ் விழுவதை இயற்கை என்று சட்டை செய்யாமல் வாழ்பவர்கள் நூற்றுக்குத் 99 பேர்.

அதைப்போலவே வாழ்வில் வரும் இன்பதுன்பங்கள் ஏன் என்று சிந்திப்பவர்கள் கோடியில் ஒருவரே.

மேலும் பிறப்பு இறப்பு என்ற ஒன்றே இல்லை.

அது மனதில் நிகழும் மாயை என்று ஞானிகள் சொல்வது நமக்குக் குழப்பத்தைத் தருகிறது.

எடுத்துக்காட்டாக பூமியில் உள்ள யாரைக்கேட்டாலும் இரவு பகல் உண்டு. சூரியன் உதிப்பதும் மறைவதும் உண்மை என்று சத்தியம் செய்வார்கள். வீடியோ கூட எடுத்து ” இதோ பார் சூரிய உதயம்! இதோ பார் அஸ்தமனம்!” என்று .

ஆனால் விண்வெளியில் பூமியின்மேல் விண்கலத்தில் சுற்றிவரும் வீரர்கள் இதைக் கேட்டு சிரிப்பார்கள். ” சூரிய உதயம் அஸ்தமனம் என்ற ஒன்று இல்லை. நாங்கள் எப்போதும் சூரியன் ஒளிவிடுவதைப் பார்க்கிறோம்!” என்று வீடியோ எடுத்துக் காட்டுவார்கள்.

ஆச்சரியம் என்னவென்றால் இரண்டுமே உண்மை. இதில் வித்தியாசம் அவரவர் நிற்கும் நிலையும் பார்க்கும் கோணமுமே!

நாம் பூமியில் உள்ளவரை சூரிய உதய அஸ்தமனம் உள்ளதைப் போல மனதால் கட்டுண்ட உண்டு,உறங்கி,உடலால் கூடி நடத்தும் இன்ப துன்ப வாழ்வில் பிறப்பும் இறப்பும் உண்மை!

மனமழிந்த முக்தி நிலையில் உடல் மட்டுமே தோன்றி மறைகிறது. நாம் மறைவதில்லை. நாம் என்றுமுள்ள பரம்பொருள். மனதால் இயற்றிய கர்ம வினைகளைக் கழிக்க உடல் தோன்றி மறைகிறது. இதை உணர்வதே ஆன்மீகத்தின் குறிக்கோள்.

வழிபாடு சடங்குகள் நம் மனதைக் கடக்க உதவும் வழிமுறைகளே. முக்தி ,விடுதலை,மோக்ஷம்(மோஹ=ஆசைகள் க்ஷயம்=மறைதல் அதாவது ஆசைகள் மறைவதே மோக்ஷம். தனியாக எங்கோ சுழலும் உலகில் அரை ஏக்கர் நிலம் கிடைப்பது என்ற பொருள் இல்லை)என்று நாம் சொல்லும் அத்தனையும் ஒரே நிலையைக் குறிக்கும் !

#முக்திமோட்சம்லிபரேஷன்ரியலைசேஷன்

எலும்புத் துண்டுகளே!

சென்ற பிறவியில்
நல்வினை செய்தவர்கள் தனக்கு அமைந்த நல்ல வாழ்க்கையை உணராமல் வீணடிக்கிறார்கள்.

சென்ற பிறவியில் தீவினை செய்து அதனை அனுபவிப்பவர்கள் திருந்தி நல்லவர்களாக வாழ்கிறார்கள்.

இது மாறி மாறி வரும்.

பாவம் புண்ணியம் இரண்டாலும் பிறவி வரும்.

பாவத்தை முழுதாக தவிர்க்க வேண்டும்.
புண்ணியம் செய்தால் ஈஸ்வரார்ப்பணம் இறைவனுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று அதன் பயனை அடைய விருப்பமில்லாமல் தன்னலமின்றி நிஸ்காம்யமாகச் செய்ய வேண்டும்.

தெரிகிறது கொஞ்சம் கொஞ்சமாக. இறையருளால் அவனுக்கே அனைத்தையும் அர்ப்பணிப்போம். அதனால் தான் இன்ஷா அல்லாஹ், அல்ஹம்ந்துலில்லாஹ் க்ருஷ்ணார்ப்பணம் சிவார்ப்பணம் ஈஸ்வரார்ப்பணம் என்று முன்னோர்கள் சொல்லுவது வழக்கம். நாம் இதன் பின்னணி அறியாத மூடர்கள்!

அதனால் பிறப்பு இறப்பு வராமல் முக்தி அடையலாம்.
இது பல பிறவிகளில் அடிபட்டு வரும் விவேகம்.
அப்படி விவேகம் வந்தவர்கள் வராதவர்கள் இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆகவேண்டும்! விவேகிகள் இன்பத்தைக் கண்டு மார்தட்டவும் துன்பத்தில் மாரடிக்கவும் மாட்டார்கள்.

விவேகம் என்பது எது உண்மையான இன்பம் என்பதை நமக்குச் சொல்வது.

அதனால் வருவது வைராக்கியம்.

இது இரண்டும் இருந்தால் பிறப்பு இறப்பு வேண்டாம் என்று முக்தி அடையத் தோன்றும்.

இந்த ஆன்ம விடுதலைத் தாகம் முமுக்ஷூத்வம் என்று சொல்லப்படுகிறது.

முமுக்ஷூத்வம் வந்தவர்கள் எப்போதும் ஆன்மீகம் பேசுதல் ஜபம் யோகம் சத்சங்கம் நல்லோர் தொடர்பு தொழுகை இறை சிந்தனை சேவை என்று இருப்பார்கள். இவர்களை losers அல்லது பைத்தியங்கள் என அழகாக உலகம் அழைக்கும்.

விவேகிகளுக்கு உலகம் துக்ககரமானது !

போகிகளுக்கு உலகம் இன்பமயமாகத் தோன்றும்.

ஆனால் உண்மையில் அனுபவிப்பது துன்பமே!

நாய் எலும்பைக் கடித்து அதிலிருந்து இரத்தம் வருவதாக நினைக்கிறது. ஆனால் நாயின் நாக்கில் எலும்பு குத்தி ரத்தம் வருகிறது. அதை ருசித்துச் சாப்பிடுகிறது.

நாம் இந்த உலக வாழ்க்கையான எலும்பைக் கடித்து ஆனந்தப்படுகிறோம். உண்மையில் ஆனந்தம் நம் உள்ளே இருக்கிறது.

ஆன்மா ஆனந்தமயமானது. அதன் தன்மை கொஞ்சமாக உலக வாழ்க்கையில் நமக்கு பொருட்களின் சேர்க்கையில் கிடைக்கிறது.

ஐஸ்க்ரீம் ப்ரமோஷன் நல்ல மார்க் கார் வீடு மனைவி கணவன் மக்கள்….. இவையெல்லாம் எலும்புத் துண்டுகளே!

Certainly pleasures but not lasting pleasures!

முக்தியெனும் மெடல்!

ஆண்டவனின் அருள் மழையில் நனைபவன் குளியலறையில் குளிக்க வேண்டியதில்லை!
ஈகோ மனித நேயமின்மை கொடூரம் வக்கிரம் ….. இப்படி அசுர குணங்கலாளான குடையைப் பிடித்துத் திரிபவன் ஆண்டவனின் அருள் மழையில் நனைய முடிவதில்லை! அப்படிப்பட்டவனே சரியை கிரியை யோகம் இன்னர் இஞ்சினியரிங் ஆர்ட் ஆஃப் லிவ்விங்  யோகா வாசி கேம்ப் என்று பாத்ரூமில் குளிக்க முயல்கிறான்!
முக்திக்கு சுலபமான வழி!
அகந்தையை விடல்!
நான் எனது பற்றை விடல்!
நிலையாமை உணர்தல்!
செய்தால் முக்தியெனும் மெடல்!

ஆன்மீகம்-47

வானவில்
=========
01 October 2018

சாதி,மத,இன,மொழி,பால்,நாடு,நிறம் என்ற பிரிவினைகளைத் தாண்டி வந்தோம்!

அற்புதங்கள் சித்துக்கள் ஒரு பொருட்டல்ல எனத் தெளிந்தோம்!

இல்லறமிக்க நல்லறமில்லை என்ற கருத்தை முன் வைத்தோம்!

நாம் ஆன்மீகம்-2 என்ற பதிவில் சொன்ன யானைப் பாதையாம் இல்லறவழியில் ஜீவன் முக்தி, மோட்சம், இறைநிலை ,பிறப்பிறப்பிலா நிலை பெறுவது எவ்வாறு எனக் காண்போம்!

63 நாயன்மார்கள் ஆழ்வார்கள் மற்றும் பல ஞானிகள் யோகிகள் அருளாளர்கள் இல்லறத்தில் இறைநிலை எய்தி இருக்கிறார்கள்!

முக்திக்கும்  சொர்க்கத்திற்கும் வேறுபாடு உண்டு! சொர்க்கம் என்பது மிகுந்த புலனின்பம் அனுபவிப்பது! புண்ணியங்கள் தீர்ந்ததும் மறுபடி பிறப்பு உண்டு!

இந்திரன் முதலானோர் பூமியில் பிறந்து இறை பூஜை செய்ததாக வரலாறு உண்டு ,கவனிக்கவும் புராணமல்ல!

நம் குறிக்கோள் இல்லறத்தின் வழி இறைநிலை! அதாவது நடைமுறை ஆன்மீகம்!

அதற்கு அஜகஜா மந்திரம் தேவையில்லை.
மனக் குவியம் போதும்! அந்த மனக்குவியம் இல்லறத்தில் அடைவது மிகக் கடினம்.  ஆனால் முடியாததில்லை!

இல்லறத்தின் அடிப்படை கணவன் மனைவி. இந்த இருவரும் இணைந்து செயல்பட்டால் வானம் வசப்படும்!

கணவன் மனித உருவில் நடமாடும் சிவன்!

மனைவி அன்னை பராசக்தியின் வெளிப்பாடு!

சிவம் ,அதில் இகரம் நீங்கினால் சவம்! அந்த இகரமே மனைவி!

அதே போல இகரம் மற்றும் தனியாய் இயங்க இயலாது! அதற்குப் பொருளும் இல்லை!

இது தான் அடிப்படை!

நமது கர்மவினைகளுக்குத் தகுந்தவாறு ஏற்ற இரக்கங்கள் வந்த வண்ணம் இருக்கும். அதைப்போல வாழ்க்கைத் துணையும் வினைப்படியே அமையும்! தலைகீழாக நின்றாலும் இதை மாற்ற இயலாது!
வாழ்க்கைத் துணைவரின் துணைவியின் குணங்களை நம் இஷ்டம்போல நாம் மாற்ற முயன்று தோற்கிறோம்.

இது தவறான அணுகுமுறை.  நமது குவியம் நம் இல்லறக் கடமைகளைச் சரிவர செய்து வருவதே! அதில் ஒரு குறையுமின்றி நடப்பதே கர்மயோகம்.
உங்களிடம் எவ்வளவு பணம் பட்டம் பதவி பகட்டான வாழ்வு இருந்தாலும் இல்லறம் என்றால் இன்பதுன்பம் வந்தே தீரும்!

இராமாயண  மகாபாரதம் இதற்கு சாட்சி!

அதனால் தான் சம்சார சாகரம் என்றார்கள்.  இல்லறம் என்ற படகோ கட்டுமரமோ கப்பலோ இருக்கும் வரை ஒருவித பாதுகாப்பே! எந்த அலை வந்தாலும் பற்றிக் கொள்ள இல்லறம் , வாழ்க்கைத் துணை என்ற துடுப்பைப் பற்றியேனும் மிதக்கலாம்!

வாழ்க்கைத் துணையின் சிறப்பை முழுவதுமாக உணர்வோம்! இதுவே நம் வீடுபேறு நோக்கிய பயணத்தின் அடிப்படை  !

#ஆன்மீகம்
( தொடர்வோம்)

எளிய அத்வைதம்!தெளிய அத்வைதம்!

காற்றில் ஈரப்பதமாக இறைவன்!
பனிக்கட்டியாக நாமும் உலகமும்!
பக்தி என்ற அக்கினியில் பனிக்கட்டி உருகி ஞானம் என்ற தீயில் ஆவியாகி காற்றில் உள்ள ஈரப்பதம் போன்ற இறைவனை பனிக்கட்டியாக “தோன்றிய” நீரின் மூலக்கூறுகள் சென்றடைகின்றன. பனிக்கட்டியாக இருக்கும் வரை அதில் உள்ள நீர் மூலக்கூறுகள் காற்றில் உள்ள ஈரப்பதமான நீர் மூலக்கூறுகளை உணரமுடியாது!
பனிக்கட்டி ஆவியாகிவிட்டால் காற்றின் ஈரப்பதத்தோடு கலந்து “தான்” என்ற எண்ணத்தைத் தேடினாலும் கிடைக்காத பரம்பொருளான ஈரப்பதம் என்பதை உணர்கிறது. பனிக்கட்டியாக இருந்த போதும் ஈரப்பதமாக மாறிய போதும் நீரின் மூலக்கூற்றில் வேறுபாடு இல்லை!
ஈரப்பதமான பின் (இரமணர்,ராமக்ருஷ்ணர்,இயேசு,புத்தர்,நபிகள்,நானக்,செய்ன்ட் பீட்டர்,காஞ்சிப் பெரியவர்,ஷீரடி பாபா….) பனிக் கட்டியாக இருக்கும் நம்மீது கருணை கொண்டு உடல் தாங்கி நம்மிடையே நடமாடி நம்மை கைப்பிடித்து “நீ கடவுள் என உணர்!” என செய்முறை விளக்கம் தருகிறார்கள்.

பனிக்கட்டியாக இருக்கும் வரை சாதி மத இன குல நாடு பால் திணை…. என பாகுபடுத்தி நேரத்தை வீணடித்து பரிதாபமாக சாகிறோம்!

ஏன் நீர் மூன்று நிலைகளில் திட,திரவ,வாயு வடிவங்களில் இருக்கவேண்டும் என்பதற்கு எப்படி அறிவியலால் சொல்லமுடியாதோ
அதைப்போல இறைவன் ஏன் இந்த உலகம் என்ற படைப்பை உருவாக்கி காத்து அழித்து மறைத்து மறைந்து விளையாடுகிறான் என்பதற்கும் பதில் கிடைக்காது! இந்த விளையாட்டை “மாயை” “அலகிலா விளையாட்டு” என்கிறோம். அலகிலா விளையாட்டானாலும் அழகான விளையாட்டு!
சேர்ந்து விளையாடுவோம் செகத்தீரே!

இறைவனோடு இரண்டறக் கலக்கும் போது நான் என்ற சொல் நான் என்ற சுயமே மாயை என உணரும்போது பிறப்பிறப்பு எனும் ஆட்டத்திலிருந்து ஓய்வு கிடைக்கிறது!

இந்த உலகம் பலப்பலமுறை தோன்றி அழிந்து தோன்றும் ஒன்று!

எப்போ முக்தி?!

குரு ஏரிக்கரையில் நின்றிருந்தார்.
அவரிடம் சென்று ” ஐயா! எனக்கு எப்போது முக்தி ?!” என்றேன். என்கையில் ஒரு பத்து கூழாங்கற்களைக் கொடுத்து “ஒவ்வொன்றாக ஏரியில் வீசு!” என்றார். நான் எல்லாக் கற்களையும் ஒவ்வொன்றாய் வீசி எறிந்தேன்.
” இப்போது சொல் ! எந்தக் கல் எந்தப் பாதையில் சென்றது? எவ்வளவு தூரம் சென்றது? எந்த இடத்தில் விழுந்தது?” என்றார்.
” அது தெரியாது குருவே! ஒவ்வொரு கல்லும் ஒவ்வொரு பாதையில் வெவ்வேறு தூரத்தில் ஏரியின் வெவ்வேறு இடத்தில் விழுந்தது. ஒவ்வொன்றும் வெவ்வேறு எடை உள்ளது மற்றும் நான் வீசும்போது ஒரே விசையோடு வீசவில்லை!” என்றேன்.
“நீயும் அதுபோல் ஒரு கல்! உன் எடை இப்பிறவியில் நீ கொண்டுவந்த கர்மவினை . எறியும் விசை உன் பிறவிக்கடல் தாண்டும் முயற்சி! நம்மில் ஊறிப்போன பழக்கங்கள் புவியீர்ப்பு விசை போல நம் பாதையில் நேர்கோட்டுப் பாதையில் செல்லாமல் தடுப்பவை! இறுதியில் ஏரியிலேயே வீழ்வதைப் போல மறுபிறப்பிற்காக ஏரிக்கடியில் உள்ள கல்லைப் போல காத்திருக்கிறாய்!” என்றார்.
ஒரு பத்து கற்களை வீசினார். எல்லாக் கல்லும் ஏரியின் கரைதாண்டி விழுந்தது.
குரு கல்வீசிப் பழகியவர் . அவரிடம் என்னை முழுமையாக ஒப்படைத்தால் அவர் வீச்சால் பிறப்பிறப்பற்ற நிலை அடையலாம் என உணர்ந்தேன்!