24 மார்ச் 2018
வானவில்
=========
ஆன்மீகம் என்றால் என்னவென்று நாம் ஆராய்ந்தறிவது,
“நாம் வாழ்க்கையில் எந்த நிலையில் தொழிலில் உள்ளோமோ அதில் ஒழுக்கம் பிறழாமல் மனித நேயத்தோடு கடமை தவறாது நடந்து கொண்டால் மனத்தூய்மை உருவாகி இறையருளும் இறை தரிசனமும் நாம் கடவுள் என்ற அனுபவமும் ஏற்படும்.”
இதுவரை சரி. இந்த ஆன்ம அனுபவத்திலிருந்து எது நம்மை தளைப்படுத்தி சிறைப்படுத்தி வைத்திருக்கிறது ? அதை உணர்ந்தால் தானே அதிலிருந்து விடுபட முடியும்.
நம்மைச் சிறைப்படுத்துவது உடல் தாங்கிய நாம் எடுக்கும் பிறவிகளே!
பிறவி ஏன் ஏற்படுகிறது? நாம் செய்த நல்வினை தீவினைகளால்!
நல்வினை தீவினை என்றால் என்ன?
நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் இரண்டு கூறுகளாகப் பிரிக்கலாம்.
செயல்+நோக்கம்
செயல்+ஆசை=பிறவிக்கு வித்து
செயல்+வெறுப்பு=பிறவிக்கு வித்து
செயல்+ 0 ஆசை = பிறப்பின்மை
செயல்+ 0 வெறுப்பு = பிறப்பின்மை
சுருக்கமாகச் சொன்னால்
எந்த ஒரு செயலையும் ” கெரகமே! கடனே!” என்று செய்யாமலும்,
” அம்புட்டும் அனுபவிச்சிரனும்! எல்லாத்தயும் லாவிரனும்” என்று செய்யாமலும்
” நமக்கு குடும்பத்தில் சமுதாயத்தில் இயற்கையாக ஏற்பட்ட கடமை இது, இதனால் வரும் இன்ப துன்பங்களைப் பொருட்ப்படுத்தி கடமை தவறிவிடக் கூடாது. இந்த உலகம் வாழ்க்கை ஒரு இன்ப துன்ப விளையாட்டே! இதில் வரும் லாப நட்டங்கள் எதுவும் நிலையற்றது! அந்த விளைவுகளை விரும்புவதும் வெறுப்பதும் என் மறுபிறவிக்கு வித்தாக அமைகிறது.”
என்ற விழிப்புணர்வோடு செயல்படுவதே பிறப்பிறப்பைக் களைய உதவும் தாரக மந்திரம்!
இந்தக் கருத்தை மிக ஆழமாக மனதில் பதியவைத்துவிட வேண்டும்!
பின் வாழ்க்கை நம் வசப்படும்!
படிப்படியாக வானுலகும் வசப்படும்!
கொழப்பமா இருக்கா?
ஆன்மாக்களுக்கு நான்கு நிலைகள்.
பூவுலகு,சொர்க்கம்,நரகம்,பிறப்பிறப்பற்ற நிலை!
நல்வினை+தீவினை = பூவுலகு
நல்வினை = சொர்க்கம்
தீவினை = நரகம்
வினையற்ற நிலை = பிறப்பிறப்பற்ற நிலை,வீடுபேறு
இந்தச் சமன்பாடுகளைத் தொடர்ந்து சிந்தித்தறிந்து நடைமுறை வாழ்வில் எப்படிக் கடைப்பிடிப்பது என அறிவோம்!
“அத்தனைக்கும் ஆசைப்படு!” ” பெரிதினும் பெரிது கேள்!” போன்ற வாசகங்கள் மிகவும் பிரபலம் அடைவது மிக்க துரதிர்ஷ்ட வசமானது. இவையிரண்டும் பிறவிக்கு வித்திடும் என்று சொல்லி இத்துடன் இம்முறை நிறைவு செய்வோம்!
(தொடரும்)
#ஆன்மீகம்