ஆன்மீகம் இரண்டாம் பகுதி
================
வானவில்
======
5 November 2018
சென்ற 51 வாரங்களாக ஆன்மீகத்தின் அடிப்படையை உணர முயன்றோம். ஆன்மீகம் பலரின் மனதில் பலப்பல பொருள் தரும். ஆன்மீகம் நம் மனதின் நிலைக்குத் தகுந்தவாறே புரியும். அதுமட்டுமே சரியென்று படும். அதனால் எத்தனை மனங்கள் உண்டோ அத்தனை கருத்துக்கள் உண்டு.
கோவில் வழிபாடு சிலருக்கு ஆன்மீகம்!
மந்திரம் சபித்தல் சிலருக்கு ஆன்மீகம்!
தியானம் பழகல் சிலருக்கு ஆன்மீகம்!
பிறருக்கு உதவுதல் சிலருக்கு ஆன்மீகம்!
பக்தியில் பஜனை செய்தல் சிலருக்கு ஆன்மீகம்!
அதனால் ஆன்மீகத்தை பல கோணங்களில் அணுகலாம். கடந்த ஓராண்டாக நாம் அறிய முற்பட்டது இதோ இங்கே!
1. ஆன்மா,மனம்,உடல்,உலகம் இது அனைவருக்கும் அனைத்திற்கும் (தாவர,விலங்கு,அஃறிணை, உயிரற்ற பொருள்வரை) பொது
2. மதம் மனம் சம்பந்தப்பட்டது. உடலைத் தாண்டியது.
3. சாதி மத இன பால் திணை மொழி நாடு போன்ற பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டது.
4.சாதி மத இன பால் திணை மொழி நாடு போன்ற பாகுபாடுகள் வாழ்வியலை நெறிப்படுத்தத் தோன்றியவையே. அதைத் தாண்டி இப்பிரிவினைகளுக்கு பயன் ஏதும் இல்லை.
5. உடல் மனவெளி இரண்டையும் சார்ந்த வேறுபாடுகளைக் கடக்காமல் ஆன்மாவை உணர முடியாது. ஆன்ம அனுபவம் பெறமுடியாது!
6. அற்புதங்கள் சித்திகள் இவற்றால் பெறும் பலன்கள் அனைத்தும் அழியும் தன்மை உடையவையே! இராமகிருஷ்ண பரமஹம்ஸர் சித்துக்களை மலத்திற்கு ஒப்பிடுகிறார்.
7. இல்லறத்தின் வழியே இறைநிலை அடையலாம்.
8. படிப்படியான மனத்துறவே நிலைக்கும். அதுவே நமது பாரம்பர்யம்.
9. பாவ புண்ணியங்கள் அனைவருக்கும் உண்டு. பாவ மன்னிப்பு மனதை இறுக்கத்திலிருந்து விடுபடச் செய்து புதுவாழ்வு தொடங்க உதவுகிறது.
10. பாவமன்னிப்பு அனைத்து மதங்களிலும் ஏதோ ஒரு வகையில் சொல்லப்பட்டுள்ளது.
11. மதங்கள் மனப்பயிற்சிக்காகத் தோன்றியவையே!
12. வழிகள் வேறுபடுவது வெளித்தோற்றத்தாலும் நம் அறியாமையாலுமே!
இப்படி ஒரு பட்டியலை மனதில் இருத்திக் கொண்டால் நமக்கு உண்மை ஆன்மீகம் வசப்படும். அதன் வழியே மனம் வசப்படும். வசப்பட்ட மனம் இறை அனுபவத்தை நம்மிடமிருந்து மறைக்காது. காலடியில் நாய் போல கட்டுப்பட்டுக் கிடக்கும். இல்லாவிடில் மனம் கள்ளுண்ட வெறிபிடித்த குரங்கே!
நம் முன்னோர் வகுத்த அறம்,பொருள்,இன்பம் ,வீடு என்ற வகைப்பாட்டில் இந்தத் தொடரைக் கொண்டு செல்லலாம் என்ற சிந்தனை இறையருளால் தோன்றியது.
இந்த ஆண்டு முழுவதும் அறம் ,அடுத்த ஆண்டு பொருள்,அதற்கடுத்த ஆண்டு இன்பம் ,இறுதியில் வீடு என 208 பதிவுகளாக எழுத எண்ணம் தோன்றியது. ஆனால் அது அவ்வளவு உபயோகமாக இருக்காது.
அதையொட்டி இந்த வாரத்தில் இருந்து அறம்,பொருள்,இன்பம்,வீடு என்று மாதத்தின் நான்கு வாரங்களில் அறிவோம்.
அதாவது இன்றைய பதிவு அறம் அடுத்தவாரம் பொருள் அதற்கடுத்த வாரம் இன்பம் அதற்கடுத்த வாரம் வீடு என்ற சுழற்சி அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 12 மாதங்களில் 52 பதிவாகத் தொடர சித்தம். இறையருளுடன் பயணிப்போம்.
இல் அறத்தைத் தொடர்வோம் .
அறத்தின் வேர் குடும்பத் தலைவி! அவளே ஆலமரம் ! அதனால் தர்மபத்தினி எனப்படுகிறாள் என்ற கருத்தை உள்வாங்கினோம்.
எல்லா உறவுகளும் தொடங்குவதும் தொடர்வதும் இல்லமே! அதுவும் அங்கே வசிப்பவர்கள் மற்றும் வந்து செல்பவர்கள் இடையில் உள்ள பிணைப்பே இல்லறத்தின் உரைகல்.
முதல் கடமையாக தலைவியானவள் இல்லத்தில் வசிக்கும் இரத்த உறவுகள் திருமண உறவுகளை மதித்து அன்பு வழிப்படுத்த கணவனின் துணையோடு முயல வேண்டும். அதற்கு மிகப் பெரிய காரணி கணவனின் தளராத துணை! அதைப் பெறுவது மிகவும் இன்றியமையாதது.
#ஆன்மீகம்