நட்பு உறவு நல்வினை தீவினை வாழ்க்கை

நட்பும் சுற்றமும் தரும் துன்பங்களை அவர்களை நோகாமல் ஏற்கவும் அவர்கள் செய்யும் நன்மைகளை பாராட்டி மகிழ்வதும் நம்மை நடமாடும் தெய்வங்களாக்கும்.

நாம் சேற்றில் விழுந்த குழந்தை போல. தாய் கொதிக்கின்ற நீரை(தீவினை) குழந்தை மேல் ஊற்ற மாட்டாள். உடல் உறையும் அளவு குளிர்ந்த நீரையும்(புண்ணியம்) ஊற்றமாட்டாள். பதமான சூட்டிலேயே குளிப்பாட்டுவாள். குழந்தை இருந்தாலும் குளிக்க முரண்டு பிடிக்கும் . ஓடி ஒழியும். தாய் இழுத்துப் பிடிக்க வருவாள். களைத்துப் போய் “டேய்! தம்பிய தூக்கிட்டுவாங்கடா !” என்று மூத்த பையனை(சுற்றம்) மகளை(உறவு) ஏவுவாள். அவர்கள் குழந்தையைப் பிடித்து வருவார்கள்(உறவு நட்பால் வரும் தொல்லை). குழந்தை அவர்களை அடிக்கும்(உறவுக்கும் நட்புக்கும் நாம் தரும் எதிர்வினை)நம் எதிர்வினை . கடிக்கும். ” அம்மா! பாப்பா கடிச்சி வைக்குது!” என்று முறையிடுவார்கள். அம்மா சிரிப்பாள். என் மார்பையே பாலூட்டும்(இறைவன் இல்லை என்று கூறுவது) போது கடிப்பவள் தானே என்று எண்ணி. இதுதான் தெளிவு.

இது தெரிந்தால் பகைவனிடமும் ஏமாற்றுக்காரனிடமும் கருணை அன்பு பெருகும்.

எல்லாம் ஒரு விளையாட்டே இந்த உடம்பு உள்ளவரையில்.

பிறகு அடுத்த உடம்பு .அடுத்த உறவு நட்பு. தொடரும் கர்மவினைகள். சுகம் துக்கம் ஏமாற்றம் சண்டை பெருமிதம் ஆணவம்….. என்று நகரும் வாழ்க்கைகளின் முடிவிலாச் சங்கிலி.

” என் தம்பி துரோகம் பண்ணிட்டான்!
மச்சான் பழிவாங்கிட்டான்!
அப்பா கைவிட்டுட்டார்!
சகோதரி க்ராதகி!” என்று அங்கலாய்ப்பது நேர விரயமே!. அவரவர் விதிவசம்,அவரவர் அனுபவம்!

நட்பும் சுற்றமும் தரும் துன்பங்களை அவர்களை நோகாமல் ஏற்கவும் அவர்கள் செய்யும் நன்மைகளை பாராட்டி மகிழ்வதும் நம்மை நடமாடும் தெய்வங்களாக்கும்.

பொருட்காட்சியில் ராட்டினத்தை இயக்குபவர்(இறைவன்) யோசிப்பார் ” இப்படி மேலும் கீழும் போவதில் என்ன ஆனந்தமோ?! மக்கள் காசு(கர்ம வினை) கொடுத்து வரிசையில் முட்டிமோதி ராட்டினத்தில்(வாழ்க்கை) ஏறுகிறார்கள். காசில்லாதவன்(கர்ம வினை இல்லாதவன்) ராட்டினத்தில் ஏற வேண்டியதும் இல்லை. வேகம் பொறுக்காமல் வாந்தி எடுக்க வேண்டியதும் இல்லை!”

#சுற்றமும்நட்பும்

இறைக்கு உருவமும் பெயரும் ஏன்?

மனித மனம் சொல் பொருள் என்ற இரண்டை மட்டுமே அறியும் தன்மை உடையது.

இதை நாம ரூபம் உடையது உலகம் என்கிறோம்.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே- தொல்காப்பியம் .

கடவுள் என்ற உடனேயே ஆணா பெண்ணா உயிரினமா என்ற கேள்வி எழுந்துவிடுகிறது.

அருவமான ஒன்றை சொல்லால் விவரிக்க முடியாது. கவனியுங்கள். “அருவமான” “ஒன்றை” . அருவம் என்ற சொல் ஒன்றை என்ற பொருளைக் குறிக்கிறது.

அல்லாஹ் என்றதும் கருணையாள”ன்” கொடையாள”ன்” என்ற ஆண் திணைச் சொல் ஒட்டிக் கொள்கிறது.

பரம பிதா என்றதும் ஆண் திணை ஒட்டிக் கொள்கிறது.

பரம் பொருள் என்றதும் பொருள் என்ற சொல் ஒட்டிக் கொள்கிறது.

பரம் ,பரம இரண்டையும் மட்டும் சொன்னால் இவை எதைக் குறிக்கின்றன என்ற கேள்வி நிற்கிறது.

அதனால் வடிவையோ ஒரு திணையையோ சாராமல் இறை தத்துவத்தை நம் மனதால் உணர முடியாது.

இறை”வனு”க்கு ,கவனியுங்கள் “வனு”க்கு என்றால் பாமரனும் புரிந்து கொள்வான்.

இறை என்று சொன்னால் பலருக்கும் புரியாது. பரம்பொருளுக்கு உருவம் பெயர் பொருத்தாமல் நம் மனதால் புரிய வாய்ப்பே இல்லை.

வாகர்த்தாவிவ ஸம்ப்ருக்தௌ வாகர்த்த பிரதிபத்தயே
ஜகதப் பிதரௌ வந்தே பார்வதி பரமேஸ்வரௌ- மகாகவி காளிதாஸர்

அதாவது சொல்லையும் பொருளையும் எவ்வாறு பிரிக்க முடியாதோ அவ்வாறு இணைந்திருக்கும் உலகத்தின் தாய் தந்தையரான பார்வதி பரமேஸ்வரனை வணங்குகிறேன் – மகாகவி காளிதாஸர்

இந்த ஸ்லோகம் எல்லா நாளும் பல கோடி பேரால் தினமும் பூஜையின் ஆரம்பத்தில் சொல்லப்படுகிறது. அவ்வளவு ஆழமானது நம் பண்பாடு.

அதனால் இறைவனை உருவகப்படுத்துவது மூட நம்பிக்கை இல்லை. மனதின் குறைபாடு.

அதவாது it is mind’s handicap not to be able to realize God without objectifying God as him,her or it.

எலக்ட்ரான் என்றதும் என்ன வடிவம் என்ற வினா வருகிறது.

மின்சாரம் என்றதும் “அதன்” தன்மை என்ன என்ற வினா வருகிறது. மின்சாரத்தைக் காணமுடியாது. ஆனால் அதன் பயன்பாட்டால் அதன் இருப்பை உணர முடியும்.

பல்பு அணைந்துவிட்டால் கரண்ட் போயிருச்சு என்கிறோம்.

ஆனால் நாம் கரண்ட்டைப் பார்த்ததில்லை.

சென்ற தலைமுறை வரை மாலையில் பல்பை ஆன் செய்தவுடன் கும்பிடும் வழக்கம் இருந்தது.

விளக்கேற்றினால் ஒளியை நன்றியுடன் வணங்கும் பழக்கம் இன்றும் பலரிடம் உண்டு.

பல்பை நாம் வணங்குவதில்லை.

அதன்பின் உள்ள மின்சாரத்தை அது தரும் ஒளியை வணங்குகிறோம்.

#இறைக்குஉருவமும்பெயரும்ஏன்

நாம் கடவுள்!

த்வைதம்,விசிஷ்டாத்வைதம் மனம் என்ற ஒன்று தனித்து உணரப்படும்போது ஏற்படும் காட்சிப் பிழைகள். அத்வைதம் மனம் அழிந்த உண்மை நிலையில் நாம் கடவுள் என உணர்தல்.
தண்ணீரில் முக்கிய குச்சி வளைந்ததாகத் தெரிவதும் குட்டையாகத் தெரிவதைப் போன்ற காட்சிப்பிழை! வெளியில் எடுத்தால் குச்சியின் நீளம் ஒரு இம்மி கூட மாறுவதில்லை. தண்ணீரின் ஒளி முறிவு எண் refractive index காற்றைவிட அதிகமாவதால் இந்த காட்சிப்பிழை ஏற்படுகிறது. மனம் அழியும் வரை இறைவன்-பக்தன் என இரட்டை நிலை! மனம் அழிந்தால் இறைவனே மிச்சம். இறைவன்-பக்தன் கிடையாது. மனம் நம் எண்ணங்களின் கோர்வை. எண்ணங்கள் ஆசை வெறுப்பால் வருபவை. ஆசை தொலைந்தால் மனம் இல்லை. நாம் கடவுள் என்ற நிலை. பிறப்பிறப்பு இல்லை.

கடவுளுக்கு கருணையே இல்ல!

உடல் படகை வடிவமைத்து ஆசைப் பாய்மரம் கட்டி உல்லாசம் என்று ஏறி வாழ்க்கைக் கடலில் கர்மவினை காற்றால் கடல் கொந்தளித்து சிக்கித் தவிக்கும் நான் கூவினேன் ” கடவுளே! உனக்குக் கண்ணில்லையா?”

” எலேய் ! போட் உன்னுது! பாய்மரம் உன்னுது! காற்று உன்னால வந்தது! அலை உன்னால வந்தது! இப்ப சொல்லு யாருக்குக் கண்ணுல்ல?!” என்றது அசரீரி!

ஒன்றே குலம் ஒருவனே தேவன் !

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது இறுதி நிலை! நம் போன்றோருக்கு பல குலங்கள் பல தெய்வங்களே சரியான பாதை! ஒன்றாம் வகுப்பில் அ ஆ இ ஈ என்றே படித்தாக வேண்டும்! அருணகிரிநாதர் பாடல் பொருள் விளக்கம் அசை சீர் பிரித்துச் சொன்னால் ஒன்றாம் வகுப்பில் விளங்காது! படிப்படியாக ஞானம் அதுவல்ல இதுவல்ல என்று அனுபவத்தால் உணர்ந்து இறைவன் நாமே என்பது இறுதிநிலை! த்வைதம் விசிஷ்டாத்வைதம் அத்வைதம்! எடுத்தவுடன் அத்வைதம் பேசினால் கைதட்டல் பட்டங்கள் கிடைக்கும்! அத்வைதநிலை கிடைக்காது! இந்துமதம் சீரழிவதன் காரணம் நாம் சித்தர்கள் போல பிதற்றித் திரிவதுதான்!

மலைமேல் நிற்போருக்கு பேருந்து ஒரு எறும்பு போல!

அடிவாரத்தில் இருக்கும்போது பேருந்து உயிர் பறிக்கும் எமன்! எறும்பு என்று எதிர்க்க முடியாது!

“இந்து”மகா சமுத்திரம்!

இந்து மதம் மிகப் பெரிய கடல்! அதில் எந்தத் துறைமுகத்திலிருந்து பயணத்தைத் தொடங்குவது என்ற தயக்கம் ஏற்படுகிறது!

வேத உபநிடதங்களின் சாரத்தை அறிவதா?

நடைமுறை ஆன்மீகம் தொடங்கி நம் மதத்தின் பயனை உடனே அடைவதா?

270 ஆண்டுகளாக உடைத்துச் சிதைக்கப்பட்ட வழிமுறைகளை சீரமைத்து வர்ணாஸ்ரமம் என்ற மாபெரும் கப்பலில் பயணிப்பதா?

இன்றும் இதை அழிக்கத் துடிக்கும் புயல் போன்ற சக்திகளோடு போராடுவதா? வாதிடுவதா?

இதற்கு காஞ்சிப் பெரியவர் அருள்வாக்கின் அடிப்படையில் தோன்றிய கருத்து:

” நம் தர்மத்தை உணர்ந்து அதைவிடாமல் நாம் கடைப்பிடிப்பதே நம் மதம் அழியாது காப்பாற்றும் வழி!”

அதனால் வாதங்களைத் தவிர்த்து ஆனால் நம் மதத்திற்கு ஏற்படும் தீமைகளைக் கவனமாக மனதில் வாங்கி நம் மத நெறிகளைக் கடைப்பிடித்து நம் குழந்தைகளுக்கு நம் வாழ்வே பாடமாக வாழ்ந்து பயணிப்பதே இன்றைய தேவை!

ஒன்று ஆங்கிலேயன் விதைத்த பிரிவினை வேரறுப்போம்!

இரண்டு நம் நடைமுறை வாழ்வில் ஆன்மீகத்திற்கு உரிய பங்களிப்போம்!

சோப்புநுரைக் குமிழிகள்!

இந்துக்களுக்குப் பெரிய சிக்கல் மிக மிக மிக பழமையான ஆழமே காணமுடியாத ஞானப் பொக்கிஷம்!

இதை ஒரு புத்தகத்திலோ ஒருவரிடம் மட்டுமோ கேட்டு அறியவும் முடியாது! புரியவும் வாய்ப்பில்லை!

மேலும் நமது வழி வினாக்கள் கேள்விகள் எழுப்பி கேட்டறிந்து தானே உணர்ந்து தெளிவு பெற்று கேள்விகள் அடங்கிய நிலையான மோனநிலையையே இறுதியாகச் சொல்கிறது!

கேள்விகள் கேட்ப்பது மனம்! அது அடங்கும் வரை கேள்விகள் சோப்புக் குமிழ்கள் போல தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கும் ! நாம் சிறு பிள்ளைகளைப் போல அதை ஒவ்வொன்றாக உடைத்து( விடை கிடைத்து) விளையாடுகிறோம்! ஆனால் பலப்பல சோப்புநுரைக் குமிழ்களை உடைத்து விளையாடிய பிறகே அந்த குமிழ்களில் ஒன்றும் இல்லை என குழந்தை உணர்ந்து ஆர்வம் இழந்து சோப்புக் கரைசலையே கொட்டிவிட்டு “ அம்மா! பசிக்கிது!” என்று ஓடுகிறது! மனம் அடங்கும் வரை “ இறைவா! உன்னைத் தவிர எதுவும் வேண்டாம்!” என்ற சரணாகதி வரும் வரை கேள்வி கேட்கும் மனம் கேட்டுக்கொண்டு அரைகுறை நம்பிக்கையிலேயே இறை வணக்கத்தைத் தொடரும்!

நாமும் அப்படியே! இந்தக் கேள்விகளிலும் அதன் பதில்களிலும் ஞானம் இருப்பதாக நமக்குத் தோன்றினாலும் அவைகளால் ஒரு பயனும் இல்லை ! நடைமுறையில் முன்னோர் வகுத்த வழியை “ கண்மூடித்தனமாக” மறுபடி சொல்கிறேன் “கண்மூடித்தனமாக “ கடைப்பிடித்தாலே பிறப்பிலா பெருநிலையை அடையலாம்! இது காஞ்சிப் பெரியவர் மேல் ஆணை!

இது ஒரு புறம் இருக்கட்டும் ! நாம் சிறுபிள்ளைகளே! அதனால் பல சோப்புக் குமிழ்களை உடைத்துத் தெளிவு பெறுவோம்!

சனாதன தர்மம்!

இந்துவாய் இருக்க நம்பிக்கை தேவையில்லை!

இந்துவாய் நடக்க முயற்சி தேவை!

செல்ஃப் சர்வீஸ்!

கோவிலுக்கு வர்ற இருக்குறவன்கிட்ட வாங்கி இல்லாதவனுக்குத் தர்றான் கடவுள்!

“ ஏலேய்! அத நீங்களே செய்யலாமுல்ல! கோவில்வரைக்கும் ஏண்டா வண்டி கட்டி வர்றீக?!

இதெல்லாம் செல்ஃப் சர்வீஸ்டா! கவ்ன்டர்ல ஏண்டா கூட்டம் போடுறீங்க?!”

அங்கலாய்க்கிறான் கடவுள்!

ஆன்மீகம்-52

ஆன்மீகம் இரண்டாம் பகுதி

================

வானவில்

======

5 November 2018

சென்ற 51 வாரங்களாக ஆன்மீகத்தின் அடிப்படையை உணர முயன்றோம். ஆன்மீகம் பலரின் மனதில் பலப்பல பொருள் தரும். ஆன்மீகம் நம் மனதின் நிலைக்குத் தகுந்தவாறே புரியும். அதுமட்டுமே சரியென்று படும். அதனால் எத்தனை மனங்கள் உண்டோ அத்தனை கருத்துக்கள் உண்டு.

கோவில் வழிபாடு சிலருக்கு ஆன்மீகம்!

மந்திரம் சபித்தல் சிலருக்கு ஆன்மீகம்!

தியானம் பழகல் சிலருக்கு ஆன்மீகம்!

பிறருக்கு உதவுதல் சிலருக்கு ஆன்மீகம்!

பக்தியில் பஜனை செய்தல் சிலருக்கு ஆன்மீகம்!

அதனால் ஆன்மீகத்தை பல கோணங்களில் அணுகலாம். கடந்த ஓராண்டாக நாம் அறிய முற்பட்டது இதோ இங்கே!

1. ஆன்மா,மனம்,உடல்,உலகம் இது அனைவருக்கும் அனைத்திற்கும் (தாவர,விலங்கு,அஃறிணை, உயிரற்ற பொருள்வரை) பொது

2. மதம் மனம் சம்பந்தப்பட்டது. உடலைத் தாண்டியது.

3. சாதி மத இன பால் திணை மொழி நாடு போன்ற பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டது.

4.சாதி மத இன பால் திணை மொழி நாடு போன்ற பாகுபாடுகள் வாழ்வியலை நெறிப்படுத்தத் தோன்றியவையே. அதைத் தாண்டி இப்பிரிவினைகளுக்கு பயன் ஏதும் இல்லை.

5. உடல் மனவெளி இரண்டையும் சார்ந்த வேறுபாடுகளைக் கடக்காமல் ஆன்மாவை உணர முடியாது. ஆன்ம அனுபவம் பெறமுடியாது!

6. அற்புதங்கள் சித்திகள் இவற்றால் பெறும் பலன்கள் அனைத்தும் அழியும் தன்மை உடையவையே! இராமகிருஷ்ண பரமஹம்ஸர் சித்துக்களை மலத்திற்கு ஒப்பிடுகிறார்.

7. இல்லறத்தின் வழியே இறைநிலை அடையலாம்.

8. படிப்படியான மனத்துறவே நிலைக்கும். அதுவே நமது பாரம்பர்யம்.

9. பாவ புண்ணியங்கள் அனைவருக்கும் உண்டு. பாவ மன்னிப்பு மனதை இறுக்கத்திலிருந்து விடுபடச் செய்து புதுவாழ்வு தொடங்க உதவுகிறது.

10. பாவமன்னிப்பு அனைத்து மதங்களிலும் ஏதோ ஒரு வகையில் சொல்லப்பட்டுள்ளது.

11. மதங்கள் மனப்பயிற்சிக்காகத் தோன்றியவையே!

12. வழிகள் வேறுபடுவது வெளித்தோற்றத்தாலும் நம் அறியாமையாலுமே!

இப்படி ஒரு பட்டியலை மனதில் இருத்திக் கொண்டால் நமக்கு உண்மை ஆன்மீகம் வசப்படும். அதன் வழியே மனம் வசப்படும். வசப்பட்ட மனம் இறை அனுபவத்தை நம்மிடமிருந்து மறைக்காது. காலடியில் நாய் போல கட்டுப்பட்டுக் கிடக்கும். இல்லாவிடில் மனம் கள்ளுண்ட வெறிபிடித்த குரங்கே!

நம் முன்னோர் வகுத்த அறம்,பொருள்,இன்பம் ,வீடு என்ற வகைப்பாட்டில் இந்தத் தொடரைக் கொண்டு செல்லலாம் என்ற சிந்தனை இறையருளால் தோன்றியது.

இந்த ஆண்டு முழுவதும் அறம் ,அடுத்த ஆண்டு பொருள்,அதற்கடுத்த ஆண்டு இன்பம் ,இறுதியில் வீடு என 208 பதிவுகளாக எழுத எண்ணம் தோன்றியது. ஆனால் அது அவ்வளவு உபயோகமாக இருக்காது.

அதையொட்டி இந்த வாரத்தில் இருந்து அறம்,பொருள்,இன்பம்,வீடு என்று மாதத்தின் நான்கு வாரங்களில் அறிவோம்.

அதாவது இன்றைய பதிவு அறம் அடுத்தவாரம் பொருள் அதற்கடுத்த வாரம் இன்பம் அதற்கடுத்த வாரம் வீடு என்ற சுழற்சி அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 12 மாதங்களில் 52 பதிவாகத் தொடர சித்தம். இறையருளுடன் பயணிப்போம்.

இல் அறத்தைத் தொடர்வோம் .

அறத்தின் வேர் குடும்பத் தலைவி! அவளே ஆலமரம் ! அதனால் தர்மபத்தினி எனப்படுகிறாள் என்ற கருத்தை உள்வாங்கினோம்.

எல்லா உறவுகளும் தொடங்குவதும் தொடர்வதும் இல்லமே! அதுவும் அங்கே வசிப்பவர்கள் மற்றும் வந்து செல்பவர்கள் இடையில் உள்ள பிணைப்பே இல்லறத்தின் உரைகல்.

முதல் கடமையாக தலைவியானவள் இல்லத்தில் வசிக்கும் இரத்த உறவுகள் திருமண உறவுகளை மதித்து அன்பு வழிப்படுத்த கணவனின் துணையோடு முயல வேண்டும். அதற்கு மிகப் பெரிய காரணி கணவனின் தளராத துணை! அதைப் பெறுவது மிகவும் இன்றியமையாதது.

#ஆன்மீகம்